Friday, December 16, 2022
நாளை
கால்பந்து
கால்களின் துடிப்பு
நிறுத்தி வைக்கிறது
இமைகளின் துடிப்பை !
பந்தை துரத்துவது
கால்களா ...
துடிக்க மறந்த
விழிகளா !
அனல் பறக்கிறது
பச்சை புல்வெளிகளில் ...
அனல் மூட்டுகிறது
இதய அறைகளில் !
களமாடுவதோ கால்கள்
கோப்பையோ கைகளுக்கு !
வலையில் விழுந்தால் கொண்டாட்டமே
கால்பந்தும் காதலும் !
களத்தில் கற்ற கலைகள்
கனவு சுமக்கும் கைகள்
காத்திருக்கும் வலைகள்
நனவாக்குமோ கால்கள்
Thursday, December 1, 2022
கவிதை தேடும் கவிதை
தேனி மலை காட்டுக்குள்ளே
மூடி வைத்த இருட்டு போல
சொல்லி வளர்த்த கூந்தலாலே
நெஞ்சம்
கந்தலாகி தவிக்கிறேனே !
சேலத்து மாம்பழம் போல்
இனிக்கும் உன் பேச்சால
கோலம் கெட்டு திரியுறேனே
நெஞ்சம்
விம்மலாகி தவிக்கிறேனே !
நாகை கடல் மீனை போல
அலையும் உன் கண்ணாலே
சோகையாய் ஆனேனே
நெஞ்சம்
திசை மாறி தவிக்கிறேனே !
கோவளம் சவுக்கு போல
வீசும் உன் பார்வையாலே
மனவளம் கெட்டேனே
நெஞ்சம்
கதிகலங்கி தவிக்கிறேனே !
தென்பாண்டி மிளகு போல
தகிக்கும் உன் நெனப்பால
மெழுகுபோல உருகுறேனே
நெஞ்சம்
உருகி தவிக்கிறேனே !
இருட்டுக்கடை அல்வாபோல
இனிக்கும் உன் காதலால
குருடனாய் ஆனேனே
நெஞ்சம்
இருளாகி தவிக்கிறேனே !
கொல்லிமலை கேணிக்குள்ள
குளித்துவிட்டு வந்தாலும்
அடங்காத அக்னியாய்
நெஞ்சம்
நீறாய் எரிய தவிக்கிறேனே !
உடன்குடி பனை பழங்கள்ளு
குடத்தோடு குடித்தவன் போல்
தடம் மாறி திரியுறேனே ...
நெஞ்சம்
இடம் மாறி தவிக்கிறேனே !
பிறை நிலா
பிறை நிலா
அம்மா வெளியே வா அம்மா
அழகாய் மேலே பாரம்மா
சும்மா இருந்த சந்திரனை
துண்டாய் வெட்டியது யாரம்மா !
வட்ட தோசை சுட்டது போல்
பாங்காய் இருந்த சந்திரனை
துட்ட சிறுவன் எவனோ
தேங்காய் சில்லாய்தான் உடைத்தான் !
மட்டி பயலவன் வெட்டி விட்டு
மீதி பாதியை என் செய்தான்
கிட்ட மினுங்கும் கட்டியெல்லாம்
வெட்டிய மிச்ச துண்டுகளோ !
===========================
தாய் இருந்தென்ன
மனைவி மக்கள் இருந்தென்ன
மாய உடல்தான் பெற்று
மானிடனாய் வாழ்ந்துமென்ன
ஓயாமல் செல்வம்தான் தேடி
பேயாய் அலைந்துமென்ன
வீணாய் வாழ்வுதனை தொலைத்தே
தீயாய் வெந்து போவதென்ன !!
===========================
வெண்பனி போல
ஓடிடும் மேகம்
தேன்கனி தந்து
தீர்க்காதோ தாகம் !
காடு மலை தாண்டி
மேனி அழுக்கை போக்கி
நடை போடும் நதியும்
மன அழுக்கை போக்கதோ !
தேகம் தழுவி செல்லும்
வயல் காட்டு தென்றல்தான்
மோக மனதினை நீவி
ஆன்ம தாகம் தீர்க்காதோ !
====================
எங்கும் நிறைந்த
இயற்கையின் வண்ணங்களே
பொங்கும் நெஞ்சினில்
துடிக்கும் எண்ணங்களே !
மற்றொரு பிறவி உண்டேல்
மலராய் நதியாய் மலையாய்
இயற்கையே உன்மடியில்
உற்றிடும் வரம் பெற்றிடேனோ !
========================
படைத்தவன் தான்
தான் படைத்தவற்றை
மோத விட்டு பார்க்கிறான்
யுத்தமென்ற ஒன்றை
ஆசையோடுதான் படைத்து
படைத்தவற்றை அழிக்கிறான்
தேவனே இன்னும் நீ வர
சுணங்குவதேன் ...
தர்மம் தனையே காக்க
தயங்குவதேன்
பூமிக்கும் ஒரு தாகம்
இருப்பதால்தானோ
வானில் படைத்தான்
ஒரு மேகம் !
கல்லணை வற்றினாலும்
நெஞ்சணையில் வற்றாது
உன் நெனப்பு
நம்ம நாட்டுல
ஊழல்தான் போனாலும்
விட்டு போகாது
உன் நெனப்பு !