ஒரு ஓவியம்
புவியில்
கவிதை எழுதுவதை
வியந்து பார்க்கிறது
நிலா!.
***************************
இந்த வார
பட்டிமன்ற
தலைப்பு .....
எந்த
நாளில்
உனது
கோலம் அழகு !!?
தீர்ப்பு
காலவரையின்றி
ஒத்தி வைக்கப்பட்டது!!
***************************
நிலம்
ஏன் அதிர்கிறது?
நீ
பொட்டு வைப்பதால்
சிலிர்க்கிறதோ
பூமி?
***************************
எப்படி
சம்மதித்தது
கோலமாவு...?
உன்
விரல்களை விட்டு
இறங்குவதற்கு!!
***************************
கோலம்
எப்படி
என்கிறாய்!!
எந்த
கோலத்தை
ரசிப்பது
நான்?
***************************
எனக்குத்தான்
தெரியுமே...
உனது
கோலத்தை
ரசிக்க
இருவிழி
போதாதென்று!!
***************************
உயிர் காக்க
அழைக்கிறான்
மார்க்கண்டேயன் ...
எப்படி
தாண்டி
போவது...?
இந்த
கோலத்தை?
***************************
உன்
காதலால்
நேரான
கோடுகள்
ஆங்காங்கே
வளைகிறதே
நாணத்தால்!!
***************************
கோலமிட்டு
விட்டாயா?
உதிப்பதற்கு
உத்தரவு
கேட்கிறான்
சூரியன்!
***************************
உன்
கோலத்தை
நகலெடுக்க
வானில்
நட்சத்திர
புள்ளிகளை
வைத்துவிட்டு
ஒளிந்து
பார்க்கிறது
நிலா!!
***************************
நீ
கோலம்
போட்டதால்தானோ
இதனை
புண்ணிய பூமி
என்கிறார்கள்!!?
***************************
நீ
கோலமிட்ட
பூமி
இனி ...
கோள வடிவா!?
கோல வடிவா!?
***************************
எறும்புகளுக்கு
பசிக்குமென்று
அரிசிமாவால்
கோலமிடுகிறாய்!!
உன் கோலத்தை
கலைக்க
மனமின்றி
பசியடக்கும்
வரம் கேட்கின்றன
எறும்புகள்!!
***************************
கோலமாவால்
வெறும்
புள்ளிகளையும்
கோடுகளையும்
வைத்தே
கவிதை
எழுதி விட்டாய் !
எதை
எழுதுவது
என்று
திகைக்கிறது
எனது
தமிழும்
எழுத்தாணியும் !!
***************************