Thursday, December 1, 2022

கவிதை தேடும் கவிதை

 தேனி மலை காட்டுக்குள்ளே 

மூடி வைத்த இருட்டு போல 

சொல்லி வளர்த்த கூந்தலாலே 

நெஞ்சம் 

கந்தலாகி தவிக்கிறேனே !


சேலத்து மாம்பழம் போல் 

இனிக்கும் உன் பேச்சால 

கோலம் கெட்டு திரியுறேனே 

நெஞ்சம் 

விம்மலாகி தவிக்கிறேனே !


நாகை  கடல் மீனை போல 

அலையும் உன் கண்ணாலே 

சோகையாய் ஆனேனே 

நெஞ்சம் 

திசை மாறி தவிக்கிறேனே !


கோவளம் சவுக்கு போல 

வீசும் உன் பார்வையாலே 

மனவளம் கெட்டேனே 

நெஞ்சம் 

கதிகலங்கி தவிக்கிறேனே !


தென்பாண்டி மிளகு போல 

தகிக்கும் உன் நெனப்பால

மெழுகுபோல உருகுறேனே 

நெஞ்சம் 

உருகி தவிக்கிறேனே !


இருட்டுக்கடை அல்வாபோல 

இனிக்கும் உன் காதலால 

குருடனாய் ஆனேனே 

நெஞ்சம் 

இருளாகி தவிக்கிறேனே !


கொல்லிமலை கேணிக்குள்ள 

குளித்துவிட்டு வந்தாலும் 

அடங்காத அக்னியாய் 

நெஞ்சம் 

நீறாய் எரிய தவிக்கிறேனே !


உடன்குடி பனை பழங்கள்ளு 

குடத்தோடு குடித்தவன் போல் 

தடம் மாறி திரியுறேனே ...

நெஞ்சம் 

இடம் மாறி தவிக்கிறேனே !

No comments:

Post a Comment