பிறை நிலா
அம்மா வெளியே வா அம்மா
அழகாய் மேலே பாரம்மா
சும்மா இருந்த சந்திரனை
துண்டாய் வெட்டியது யாரம்மா !
வட்ட தோசை சுட்டது போல்
பாங்காய் இருந்த சந்திரனை
துட்ட சிறுவன் எவனோ
தேங்காய் சில்லாய்தான் உடைத்தான் !
மட்டி பயலவன் வெட்டி விட்டு
மீதி பாதியை என் செய்தான்
கிட்ட மினுங்கும் கட்டியெல்லாம்
வெட்டிய மிச்ச துண்டுகளோ !
===========================
தாய் இருந்தென்ன
மனைவி மக்கள் இருந்தென்ன
மாய உடல்தான் பெற்று
மானிடனாய் வாழ்ந்துமென்ன
ஓயாமல் செல்வம்தான் தேடி
பேயாய் அலைந்துமென்ன
வீணாய் வாழ்வுதனை தொலைத்தே
தீயாய் வெந்து போவதென்ன !!
===========================
வெண்பனி போல
ஓடிடும் மேகம்
தேன்கனி தந்து
தீர்க்காதோ தாகம் !
காடு மலை தாண்டி
மேனி அழுக்கை போக்கி
நடை போடும் நதியும்
மன அழுக்கை போக்கதோ !
தேகம் தழுவி செல்லும்
வயல் காட்டு தென்றல்தான்
மோக மனதினை நீவி
ஆன்ம தாகம் தீர்க்காதோ !
====================
எங்கும் நிறைந்த
இயற்கையின் வண்ணங்களே
பொங்கும் நெஞ்சினில்
துடிக்கும் எண்ணங்களே !
மற்றொரு பிறவி உண்டேல்
மலராய் நதியாய் மலையாய்
இயற்கையே உன்மடியில்
உற்றிடும் வரம் பெற்றிடேனோ !
========================
படைத்தவன் தான்
தான் படைத்தவற்றை
மோத விட்டு பார்க்கிறான்
யுத்தமென்ற ஒன்றை
ஆசையோடுதான் படைத்து
படைத்தவற்றை அழிக்கிறான்
தேவனே இன்னும் நீ வர
சுணங்குவதேன் ...
தர்மம் தனையே காக்க
தயங்குவதேன்
பூமிக்கும் ஒரு தாகம்
இருப்பதால்தானோ
வானில் படைத்தான்
ஒரு மேகம் !
கல்லணை வற்றினாலும்
நெஞ்சணையில் வற்றாது
உன் நெனப்பு
நம்ம நாட்டுல
ஊழல்தான் போனாலும்
விட்டு போகாது
உன் நெனப்பு !
No comments:
Post a Comment