Tuesday, February 17, 2026

வள்ளி


உன்னை 
காணும்போதெல்லாம் 
என் விழிகளும் 
இதயமும் 
கூட்டணி அமைத்து விடுகின்றன ..
என்னை விட்டு 
உன்னோடு !!
**************************

உன் 
விரல் மையினால் 
நாட்டின் தலையெழுத்து 
மாறுகிறதோ இல்லையோ ..

உன் 
விழி மையினால் 
மாறி விட்டது 
என் 
தலையெழுத்து !!
**************************

ஓட்டு போடும்முன் 
உணர்த்தி விட்டார்கள் 
வாக்காளன் நிலையை ...
கறுப்பு மையினால்
விரலுக்கு  
நாமம் போட்டு !!
**************************
சற்றே
உற்றுப்பார்...

உன்னை
கடந்து செல்ல 
மனமின்றி 
ஆற்று நீர் கூட
ஓடாமல் 
நின்று விட்டது!!
******************************

மொழியை 
திணிப்பதாக 
புகார் சொல்கிறார்கள் !!

ஒவ்வொரு நொடியும் 
பார்வையாலேயே 
காதல் மொழியை 
என் மீது 
திணிக்கிறாயே ..

யாரிடம் 
புகார் சொல்வது 
நான் !!
******************************
உனது 
அன்பின் 
துளிகள் 
போதாதோ 
எனது 
வாழ்க்கை சக்கரம் 
சுழல்வதற்கு !!
******************************
விலை மதிப்பில்லா 
உன் 
ஒவ்வொரு துளி 
அன்பிலும் 
சுழல்கிறது 
எனது 
வாழ்க்கை சக்கரம் !!
******************************
அனாதையாகத்தான் 
இருந்தேன்...

நீ
பிறக்கும்வரை!!
********************************
கட்டத்தில் இருக்கும்
ராணியே
கலங்கடிக்கிறது...

எப்படி
சமாளிப்பேன்....!?
எதிரிலிருக்கும் 
ராணியை!?
**********************************
Like பட்டன் அழுத்தவில்லை....
Follow பட்டனும் அழுத்தவில்லை..
உன்னை 
தொடர ஆரம்பித்து விட்டதே...
என் இதயம்!!
*******************************************
எந்த
மலையையும்
கடக்குமென்று
சொன்னானே ....!!?
உன்
வீட்டை
கடக்க முடியாமல்
திணறுகிறதே ...
இந்த
வண்டி..!!!
*******************************************
**********************************************
தவறாக
சொல்லி விட்டான்
புத்தன் ...
உன் மீது கொண்ட
ஆசையே
என்
இன்பத்துக்கு
காரணம்!!
**********************************************
கோபுரத்தை
ஏன்
அங்கே 
கட்டியிருக்கிறார்கள் ...?
நீ
இங்கிருக்க...!!
************************************************
சக்தி....
என்று
இறுமாப்பு 
கொள்ளாதே!!

தோற்றே போவாய் ...
என் 
காதலின்
சக்தியிடம்!!
************************************************
அழகு 50 கிலோ!
மொத்தம் 50 கிலோ!!
************************************************

நிலவில்லா
அமாவாசையில்தான்
தீபாவளியாம்!!
நம்
வீட்டில் 
தீபாவளி கிடையாதாம்...
நிலவாய் நீ
வீட்டிலிருப்பதால் !!

பஞ்சாங்கமே
சொல்கிறது!!
**********************************************

நகை
அழகாகி
விட்டது ...
உன்னை
அணிந்து
கொண்டதால்!!
**********************************************
திருஷ்டி
கழிக்கும் சாக்கில்
உன்னை
பார்த்து விடலாமென
பூசணிக்காயாய்
பிறக்கும்
வரம் கேட்டு
தவமிருக்கின்றன
சில ஆன்மாக்கள்
***********************************************
பெண்ணைத்தானே
காதலிக்க
விரும்பினேன் ...?
காதலே
பெண்ணாக
வந்தால்
என்ன செய்வேன்...?
***********************************************
அது சூரியன்தான்...
உனக்கு
வியர்க்கக்கூடாதென்று 
சந்திரனைப்போல
வேடமணிந்து 
வருகிறான்...
***********************************************
விக்ஸ் தயாரிப்பவன்
புத்திசாலிதான் ...
உபயோகிக்கும் முறை
என்று தலைப்பிட்டு...

சக்தியின் கைகளால்
போட்டுக் கொண்டால்
பலனளிக்கும்

என்று எழுதியிருக்கிறானே!!
***********************************************
கவிதைப் புத்தகத்தின் 
அட்டையில்
உனது படத்தை
போட்டேன் ...

அட்டைப்பட கவிதையே
அபாரம் என்று
சொல்கிறார்கள் ... 
*************************************************
பூக்களின்
தலைநகரம் 
எதுவென்று 
கேட்டிருக்கிறார்கள்...

எழுதிவிடவா..
பதிலை !!?
உன்
கூந்தலென்று!!
***************************************************
வரம் கேட்டு
தவமிருப்பவர்களிடம் 
முதலிலேயே 
சொல்லி விடுகிறேன்...
இரண்டு வரங்கள்
கொடுக்க முடியாதென்று...
சாகாவரம்...
உன்னை விட
அழகாகும் வரம்!!
*****************************************************
சர்வாதிகாரம்
நல்லதென
சொல்கிறதே..
உனது
காதல் அகராதியின்
பக்கங்கள்!!
*****************************************************
இரவு
ஏன்
இவ்வளவு
நீண்டதாக
இருக்கிறது?
தூங்கும் உன்னை
தாலாட்ட
மெதுவாக
சுற்றுகிறதோ
பூமி!!?
***************************************************

பள்ளிக்கூடங்களையெல்லாம் 
மூடிவிடலாமா ..!!?

உனது  
பார்வைதான் 
எல்லோரையும் 
கவிஞனாக்கி 
விடுகிறதே !!

******************************************************************
நீ 
நடந்து 
வரும்போது
அழகாகி 
விட்டது ...
இந்த  
பூந்தோட்டம் !!

******************************************************************

அழகிற்கு 
எதற்கு 
ஒப்பனை ?

ஒருவேளை 
அழகுசாதன 
பொருட்களுக்கு 
அழகூட்டுகிறாயோ !!

******************************************************************

நான்கு அல்ல ..

ஐந்தாவதாய் 
ஒரு 
யுகமும் 
இருக்கிறது ...

நீ 
மௌனமாய் 
இருக்கும் 
மணித்துளிகள்தான் 
மவுன யுகம் 
என்று 
ஐந்தாவது யுகமாய் !!

******************************************************************

என்ன 
பாவம் 
செய்தன ...?

உன் 
பெயரிலுள்ள 
எழுத்துக்களை 
தவிர 
பிற 
எழுத்துக்கள் !!?

******************************************************************

மேடை 
ஏறிவிட்டு 
கவிதை 
சொல்லாமலே 
"சிறந்த கவிதை"
என்று 
பரிசு 
வாங்கி விடுகிறாய் 
நீ !

******************************************************************
இப்பிபஞ்சத்தையே 
உனக்கு
பரிசாகத்தர 
எண்ணியிருந்தேன்...

பிரபஞ்சமே 
நீதான்
என்றறியாமல்!!!
******************************************************
இன்று
நீ மௌன விரதம்
இருப்பதை
உன்
விழிகளுக்கு
தெரிவிக்கவில்லையா..?

எதை எதையோ பேசி
பாடாய் 
படுத்துகிறதே!!!
*******************************************************

அணு ஆயுதப்போர்
வந்துவிடுமோவென 
அஞ்சுகிறார்கள்...

உன்
மௌனத்தை விட
கொடிய ஆயுதத்தை 
யார்
கண்டு பிடிக்க 
போகிறார்கள்..!!?
********************************************************

வருடங்களோ 
யுகங்களோ 
கடந்தாலும் ...
ஒவ்வொரு 
நொடியும் 
இந்த பிரபஞ்சம் 
தன்னை 
புதுப்பித்துக்கொண்டே 
இருக்கிறது ...
நமது 
அன்பை போல !!

****************************************

Saturday, January 24, 2026

சிவசக்தி

கார்மேகமும் 
வர்ணம் பூச
முயல்கிறது ...

உன் 
வருகைக்கு 
கருநிறம்
காட்டினால் 
எதிர்ப்பாகி
விடுமாம்!!
************************************************
கவிஞனாகும்
வரம்
கேட்டான்
ஒருவன் ...

கொடுத்து
விட்டேன் ..

உன்னைப்போல்
ஒரு
காதலியை!!
*************************************************
இலக்கணம்
எழுதிக்கொண்டிருக்கிறேன்..
காதலுக்கு ...

என்ன
எழுதுவதென்று
தெரியவில்லை ...

உன் 
பெயரைத்தவிர ...
************************************************
சூரியனுக்கு
உன் மீது
என்ன
கரிசனமோ!!
உனது
நிழலில் கூட
கருமை தவிர்த்து
வர்ணஜாலம்
காட்டுகிறானே!!
**************************************************
உன்
பார்வையே
ஆக்கவும்
அழிக்கவும்
செய்கிறதே !!

நான்
என்ன
செய்யப்போகிறேன்..?
இந்த
சூலத்தால்!!
***************************?***********************
என் 
அசைவை 
சக்தி தாண்டவம் 
என்றல்லவா 
சொல்ல வேண்டும் !

சக்தியின்றி 
இங்கே 
சிவம் 
ஜடம்தானே !
***************************?***********************
வார்த்தை கட்டுகளாய் 
நான் எழுதியதை 
நீ 
வாசிக்க ஆரம்பித்தாய் !!

கவிதை பிறந்தது !!
********************************************************
தொலைந்தவர்களை 
மை போட்டு 
பார்ப்பார்களாமே !!

நீ 
கண்ணில் 
மை போட்டதால்தானே 
நான் 
தொலைந்தே 
போனேன் !!
********************************************************
உன்
விழி சொல்லும்
கவிதைகளுக்கு
விளக்க உரை எழுத
திணறி
தவிக்கிறது
இந்த AI
**************************(******************
உன் 
பெயரை 
உச்சரிக்கும் 
ஒவ்வொரு 
நொடியும் 
இதயம்  
புது மொழியை 
கற்று கொள்கிறது !
********************************************************
உன் 
கண்கள்தான் 
நொடிக்கொரு 
கவிதை எழுதுகிறதே !

ஓலைச்சுவடியில் 
என்ன 
எழுத போகிறாய் !?
***************************************************
என் 
சூலாயுதத்தை விட 
பலமாக 
தாக்குகிறதே !!

அப்படி 
என்னதான் 
வைத்திருக்கிறாய் 
கண்களில் !!
***************************************************



Thursday, January 15, 2026

சிவசக்தி காதல்

ஒரு
முட்டாள் கவிஞன்
பாடினானாமே?
நான்
மனிதனாய் பிறந்து
காதலித்து
வேதனையில்
வாட வேண்டுமென்று!!
மடையன் ...
காதலுக்கு
உவமையே
நாமென்று
அறியான் 
போலும்!!
**************************************
உன்
மனதிலாடும் 
சித்தன்
நான்!!
ஏனோ
என்னை
மயானத்திலாடும் 
பித்தன்
என்கிறார்கள்!!
*****************************************
நீ 
தடுக்கவே 
வேண்டாம் ...
இதயத்தில்
இருக்கும்
சக்தியை தாண்ட
ஆலகாலத்திற்கு
சக்தி இருக்கறதா 
என்ன!?
****************************************
மும்மொழி
திட்டம்
இதுதானோ!!?
நீ
பேசும் மொழி..
உனது
கண்களின் மொழி..
உனது
மௌன மொழி!!
******************************************
கண்களாலேயே 
என்
இதயம் முழுதும்
அள்ளிப்போகிறாய் ...
இதயமற்றவனென
பரிகசிக்கிறார்கள்
அடியார்கள்!!
******************************************
நான்
இடப்பாகத்தை
உனக்கு
தந்ததாக
கதை கட்டுகிறார்கள் ...
எனது
எல்லா பாகமும்
நீயே ஆக...
எப்பாகத்தை
தருவது
நான்!?
*****************************************
மனக்கிளையில்
நீ
சாய்ந்த
இடங்களிலெல்லாம்
துளிர்
விட்டிருக்கிறது ...
உன்
நினைவுகள்!!
********************************************
உலகிற்கு
ஒளி கொடுப்பது
நானே
என்கிறார்கள் ...
எனக்கல்லவா
தெரியும்
மின்சாரமாய் 
நீ
இருக்கிறாய்
என்று!!
**********************************************
உயிர் 
கண்களுக்கு
தெரியாதாமே !!
நீ
எப்படி
தெரிகிறாய்
என்
கண்களுக்கு!?
***********************************************
வெறும் 
வார்த்தை கட்டுகளாய் 
நான் கிறுக்கியது 
கவிதை 
ஆகி விட்டது..
நீ படித்த போது!!
************************************************
தென்றல் 
சுமந்து வருகிறது
உன் வாசமும் சுவாசமும் ...

வாசத்தை 
திருடுகிறது 
ரோஜாக்கூட்டம் ...

சுவாசத்தை
திருடுகிறேன்
நான் ...!!
*****************************************************