Sunday, August 9, 2026

வசந்தம் தேவையில்லை!

தவம் கலைத்தவன்
தையலை நோக்கினான்...

நெற்றிக்கண் நெருப்பு
பனித்துளியானது!

மரங்கள் துளிர்த்தன...
மலர்கள் மலர்ந்தன...
தென்றல் தவழ்ந்தது...

பிரபஞ்சத்தின்
முதல் காதல்
பிறந்தது —
வசந்தமாய்!

Friday, August 7, 2026

பஞ்சமில்லை

சோற்றுக்கு
பஞ்சம் வந்தாலும்
கவிதைக்கு
பஞ்சம் வருவதிலலை!

என்னத்தை சொல்லுதோ ?
எண்ணத்தை சொல்லுதோ !

Sunday, August 2, 2026

ஒன்றல்ல கண்ணே...

மழைத் துளியும்
உன் பார்வையும்
ஒன்றல்ல கண்ணே...
மழை நனைப்பது
உடலை மட்டும்!

Sunday, July 26, 2026

வேறே வசந்தமும் ஏனோ?

ஆண் :
வசந்த காலத்திற்கு 
வீசிடும் தென்றலும் 
வாசனை பூக்களும் ஏனோ?
என் விழி முன்னே 
நீயுமிருந்தால் 
வேறே வசந்தமும் ஏனோ?

பெண் :
கோவில் பூஜைக்கு
கனலும் கற்பூரமும்
திரியும் தீபமும் ஏனோ?
உனதன்பு தீபம்
என்றும் இருந்தால் 
வேறே பூஜையும் ஏனோ?

சரணம் 1
ஆண் :
தென்றலும் உன்னை 
தீண்டிய பின்பு 
பொறாமை தீயில் 
உருகுது  !
பூந்தோட்டமும் உன்னை 
கண்டதனாலே 
பூக்களின் வாசனை 
மறக்குது !

ஆண் :
வசந்த காலத்திற்கு 
வானில் மதியும் 
குயில்களின் கீதமும் ஏனோ?
என் விழி முன்னே 
நீயுமிருந்தால் 
வேறே வசந்தமும் ஏனோ?

பெண் :
கோவில் பூஜைக்கு
மலர் சரங்களும் 
அர்ச்சனை பூக்களும் ஏனோ?
உன் அன்பு மலர்கள்
என்றும் இருந்தால் 
வேறே மலர்களும் ஏனோ?

சரணம் 2
ஆண் :
காவிரிக்கரையில் 
உன் நடை கண்டு 
அன்னமும் கொஞ்சம் 
நாணுது !
மயில்களும் உன்னை 
கண்டு மயங்க 
கூந்தலும் மேகமாய்  
தோணுது !  

ஆண் :
வசந்த காலத்திற்கு 
மலையின் அருவியும் 
மயிலின் நடனமும் ஏனோ?
என் விழி முன்னே 
நீயுமிருந்தால் 
வேறே வசந்தமும் ஏனோ?

பெண் :
கோவில் பூஜைக்கு
பஜனை சங்கீதமும் 
மந்திர ஒலிகளும் ஏனோ?
உன் அன்பு மொழிகள் 
என்றும் இருந்தால் 
வேறே மந்திரம்  ஏனோ?

சரணம் 3
ஆண் :
வைகறை சூரியன் 
உன்னெழில் கண்டு 
பொன்னொளி வீசி 
ஆடுதே !
மாலை கதிரவன் 
மறைவதனாலே  
பிரிய மனமின்றி 
வாடுதே !

ஆண் :
வசந்த காலத்திற்கு 
அலையும் கடலும் 
மாலையில் சுடரும் ஏனோ?
என் விழி முன்னே 
நீயுமிருந்தால் 
வேறே ஒளியும் ஏனோ?

பெண் :
கோவில் பூஜைக்கு
நெற்றியில் நீறும் 
குளிர் சந்தனமும் ஏனோ?
உன் அன்பு மலர்கள்
என்றும் இருந்தால் 
வேறே திலகமும் ஏனோ?

ஆண் :
நான்கு வேதங்களும் 
பதினெண் புராணமும் 
வானில் 
சொர்க்கம்  தேடுமே !

பெண் :
கைகள் கோர்த்து
உன்னுடன் நடந்தால்
பூமியே 
சொர்க்கம் ஆகுமே !

ஆண் :
வசந்த காலத்திற்கு 
தேனீயும் தும்பியும் 
பட்டாம் பூச்சியும் ஏனோ?
என் விழி முன்னே 
நீயுமிருந்தால் 
வேறே இனிமையும் ஏனோ?

பெண் :
கோவில் பூஜைக்கு
அறுசுவை கனிகளும் 
அபிஷேகங்களும் ஏனோ?
உன் அன்பு மலர்கள்
என்றும் இருந்தால் 
வேறே கோவிலும் ஏனோ?

இருவரும் :
மலரும் மணமும் போல் 
ஒன்றாய் இருந்தால் 
உலகே 
வசந்தம் ஆகுமே  !
இதயத்தில் காதல் 
என்றும் இருந்தால் 
இல்லமே ஆலயம் ஆகுமே !

================

செந்நிற இதழ்கள் 
தேனின் இனிமை போல் 
சிந்தையில் தினமும் ஊறவே !
விழிகளின் மொழிகள் 
இதயக்கவிதை என 
உயிரின் இசையாய் மாறவே !

மான் விழி மங்கை 
என் அருகில் இருந்தால் 
வேறே சொர்க்கமும் ஏனோ ?

Friday, July 24, 2026

பருவக்காற்று வீசுது

பருவக்காற்று 
வீசுது 
பல கதைகள் 
பேசுது.

Wednesday, July 22, 2026

ஆசை நெஞ்சில் மின்னல் வந்ததோ

தோட்டம் ஓன்று 
நேரில் வந்து 
ஆடச்சொன்னதோ ?
தோகை கொண்ட 
காதல் சிந்து 
பாடச் சொன்னதோ ?

Tuesday, July 21, 2026

மூங்கிலிலே வரும்

மூங்கிலிலே 
வரும் 
மோஹன ராகம் 
பூங்குயிலை 
வெல்லுமா ?
தேன் கவிதை 
சொல்லுமா ?

விலாசம் மட்டும் இருக்கிறது

நான்
தூங்குவதற்காக
தாலாட்டு
பாடினாய்...
உனது 
இறுதி
உறக்கத்திற்கு
ஒப்பாரியும்
பாட முடியாமல்
தவித்து நிற்கிறது
மனது !!

Sunday, July 19, 2026

இதயத்தின் சொத்து தகராறு

உன்
காதலை
என்
நெஞ்சில்
குடிவைத்து
விட்டாய்...
என்
நினைவுகள்
எல்லாம்
வாடகையாகிப்
போனதோ!

நீயாவது அறிவாயா பதிலை?

கண் 
வழியே ...

என் மனது ..

கவிதை 
போல் 
ஓடியதோ !

Wednesday, July 15, 2026

பார்வை இலக்கியம்

நான் 
காகிதத்தில் 
வடிப்பதெல்லாம் 
உனது 
பார்வை 
எனது 
இதயத்தில் 
எழுதும் 
கவிதைகளைத்தான் !

Tuesday, July 14, 2026

மூக்குத்தி

உன்
மூக்குத்தி
மின்னும்
ஒவ்வொரு முறையும்...
என்
இதயம்
மின்தடையின்றி
தடுமாறுகிறது!

Saturday, July 11, 2026

வண்ணத்து பூச்சிகளிடம் மோதாதே

வண்ணத்து பூச்சிகளை 
ஏன் 
படைத்தான்  
என்கிறாய் ?

நிறங்களை 
எப்படி 
அழகாக்குவது ?
====================
நிறங்களை 
உருவாக்கும் 
போட்டியா ?

வண்ணத்து பூச்சிகளிடம் 
மோதாதே ...

தோற்றுவிடுவாய் !
====================
நிறங்கள் 
என்ற தலைப்பில் 
கவிதை  எழுத 
பூங்காவில் அமர்ந்து 
சிந்தித்தேன் ...

ஆரம்பித்து 
வைத்தது 
இயற்கை  ..

எதிரே 
பூச்செடியில் 
வண்ணத்துப்பூச்சி !
====================
பூக்கள் 
உன் 
கூந்தலுக்காக 
மட்டுமே 
பூக்கின்றன 
என்று எண்ணியிருந்தேன் ..

வண்ணத்து பூச்சிகளை 
பார்க்கும்  
வரை !
====================
சோர்ந்து
போனாள்...

வண்ணத்துப்பூச்சியை
துரத்திய
சிறுமி!

சோர்வதே
இல்லை...

உன்னை
துரத்தும்
என்
நினைவுகள்!
====================
வண்ணத்து 
பூச்சிகளை 
படைத்து 
தன்னை 
அழகாக்கிக் கொண்டது 
இயற்கை !

இயற்கை 
பிறழ்வதே 
இல்லை !


தும்பிப்பெண்ணே !

தும்பிக்கு
பூக்கள் மீது
மோகம்...

எனக்கோ
தும்பியே
மோகம்!
══════════════
உன்
மெல்லிய
பார்வையோடு
போட்டி
போடுகிறதே...

தும்பியின்
மெல்லிய
சிறகுகள்!
══════════════
குளத்தோரம்
வட்டமிட்டு
திரும்பிவிட்டது
தும்பி...

என்
நினைவுகளின்
ஓரத்தில்
இன்னும்
நீ!
══════════════
அதிராமல்
மலர்மீது
அமர்ந்துவிட்டதே
தும்பி...

உன்
பார்வை
அமர்ந்ததற்கே
பிரளயமாய்
அதிர்கிறது
இதயம்!
══════════════
தோட்டத்திற்கு
பூக்கள்
அழகா?

பூக்களில்
அமரும்
தும்பிகளால்
அழகா?

அல்லது...

நீ
உலவுவதால்
தோட்டமே
அழகா?
══════════════
பூக்களை
ஏன்
ஏமாற்றுகிறாய்?

தங்களைப்
பார்க்கத்தான்
தும்பிகள்
வருகின்றன
என்று...
பூக்கள்
இன்னும்
நம்பிக்கொண்டிருக்கின்றன!

இயற்கை பிறழ்ந்த கணம்

புயல் 
கடந்தபின் 
சேதம் என 
சொல்வதுண்டு  ...

இதென்ன 
தென்றல் 
கடந்தபின் 
சேதம் ?

Thursday, July 9, 2026

நெஞ்சுல வெதச்சது !

மல்லிப்பூ
செடியில் 
பூத்தா 
வாசனதான் 
துளைக்கும் ...

நீ 
கூந்தலிலே 
வச்ச பூ ...

மனசயெல்லாம் 
பொளக்கும் !.

Sunday, July 5, 2026

தள்ளாடும் இயற்கை

வியர்க்கிறதென  
மரத்தடியில் 
ஒதுங்கி விட்டாய் ...

வியர்க்கிறது பார் ..

பாவம்
மரத்திற்கு !!

கோலக் கவிதைகள்

வாசல் முழுவதும்
நீ
வரைந்த கோலம்...

என்
வாழ்க்கை முழுவதும்
நீ
வரைந்த காதல்!

கால்பந்து

புல்வெளி முழுவதும்
ஓடுவது 
ஒரு பந்துதான் ...

ஆயிரம் இதயங்கள்
அதன் பின்னால்!
==================
கோல் கம்பிகளுக்கு
நடுவேதான்
இடைவெளி...

வெற்றிக்கும்
தோல்விக்கும்
இடையில் இல்லை!
==================
விசில்
ஒலிக்கிறது...

ஆட்டம் மட்டுமல்ல,
இதயங்களும்
தொடங்குகின்றன!
==================
பந்து
உருண்டு செல்கிறது...

கனவுகளோ
சிறகடித்துச் செல்கின்றன!
==================
கால்கள்
எழுதும் கவிதைக்கு...

கோல்கள்தான்
நிறுத்தற்குறிகள்!
==================
வியர்வைத் துளிகளை 
நிரப்பத்தான் 
வெற்றிக் கோப்பையோ !
==================
மைதானம்
பச்சை நிறத்தில்...

ஆனால்
எரிவதென்னவோ
வீரத்தின் செந்நிறம்!
==================
நேரம்
தீர்ந்து போகலாம்...

நம்பிக்கை
தீர்ந்து போகக் கூடாது!
==================
பந்தின்
ஒவ்வோர் சுழற்சியிலும்...

விதியும்
சுழன்று கொண்டே
இருக்கிறது!
==================
கோப்பையை
உயர்த்தும் கைகள்...

அதன் அடியில்
தெரியாமல் மறைந்திருக்கும்
ஆயிரம் முறை
விழுந்த கால்கள்!
==================
கால்பந்து
வட்டமாக இருப்பதால்...

யாருடைய
வெற்றியும்
நிரந்தரமல்ல!

ஊர் சொல்லும் காதல்

மதுரை மல்லிகைப்பூ போல
மணக்கும் உன் மூச்சாலே
நித்தம் மயங்கித் திரியுறேனே...
நெஞ்சம்
வாசமாகி தவிக்கிறேனே!
====
காஞ்சிபுரம் பட்டுப் போல
மென்மையுள்ள உன் தீண்டலாலே
காற்றுக்கே பொறாமையாச்சே...
நெஞ்சம்
நூலாகி தவிக்கிறேனே!
====
மணப்பாறை முறுக்கு போல
சுற்றிவரும் உன் சிரிப்பாலே
நேர்வழி மறந்தேனே...
நெஞ்சம்
சுற்றிவந்து தவிக்கிறேனே!
====
திண்டுக்கல் பூட்டு போல
பூட்டிவிட்ட உன் பார்வையாலே
விடுபட வழியில்லையே...
நெஞ்சம்
சிறையாகி தவிக்கிறேனே!
====
பழனி பஞ்சாமிர்தம் போல
இனிக்கும் உன் முத்தத்தாலே
பசிதீர மறுக்கிறேனே...
நெஞ்சம்
பக்தியாகி தவிக்கிறேனே!
====
ஊட்டி பனிமூட்டம் போல
சூழ்ந்த உன் நினைவாலே
வழியெல்லாம் மறந்தேனே...
நெஞ்சம்
மூடுபனியாய் தவிக்கிறேனே!
====
குற்றாலம் அருவி போல
கொட்டும் உன் சிரிப்பாலே
நனைந்தே போனேனே...
நெஞ்சம்
வெள்ளமாகி தவிக்கிறேனே!
====
பாபநாசம் தண்ணீரைப் போல
தெளிந்த உன் மனசாலே
பாவமெல்லாம் மறந்தேனே...
நெஞ்சம்
புனிதமாய் தவிக்கிறேனே!
====
செட்டிநாடு காரம் போல
சுட்டெரிக்கும் உன் கோபத்தாலே
சொல்லெல்லாம் கருகுதடி...
நெஞ்சம்
தணலாகி தவிக்கிறேனே!
====
கும்பகோணம் டிகிரி காப்பி போல
மயக்கும் உன் பார்வையாலே
தூக்கமெல்லாம் தொலைஞ்சிடுச்சே...
நெஞ்சம்
விழித்தே தவிக்கிறேனே!
====
சிவகாசி தீப்பொறி போல
சிதறும் உன் சிரிப்பாலே
மத்தாப்பாய் சிதறுகிறேனே ...
நெஞ்சம்
வாணவேடிக்கையாய் தவிக்கிறேனே!
====
காரைக்குடி வீடு போல
விசாலமுள்ள உன் உள்ளத்தாலே
குடியேறி வாழுறேனே...
நெஞ்சம்
சொந்தமாகி தவிக்கிறேனே!
====
இராமேஸ்வரம் கடல் போல
முடிவில்லா உன் காதலாலே
கரைதேடி அலையுறேனே...
நெஞ்சம்
அலையாகி தவிக்கிறேனே!
====
கொடைக்கானல் குறிஞ்சிப் போல
அரிதாகும் உன் தரிசனத்தாலே
வருடங்கள் காத்திருக்கேனே...
நெஞ்சம்
பூவாகி தவிக்கிறேனே!
====
கன்னியாகுமரி சூரியோதயம் போல
மலரும் உன் முகத்தாலே
ஒவ்வொரு காலையும் புதுசாச்சே...
நெஞ்சம்
விடியலாகி தவிக்கிறேனே!
---
x

காதலும் அறிவியலும்

 ### 1. ஈர்ப்பு விசை

உன்னை
மறக்க
முயன்றாலும்...
என்
நினைவுகள்
மீண்டும்
உன்னிடமே
விழுகின்றன...

இது
நியூட்டன் 
கண்டுபிடிக்காத 
ஈர்ப்பு விசையா...
இல்லை,
உன்
விழிகளின்
விதியா!

### 2. ஒளியின் வேகம்

உன்
ஒரு
புன்னகை...

என்
இதயத்தை
அடைவதற்கு
ஒளியைக்கூட
முந்துகிறது...

எந்த அலகால்  
அளப்பது !
இந்த வேகத்தை 

### 3. குவாண்டம்

நீ
அருகில்
இல்லை...

ஆனாலும்
என்
இதயத் துடிப்பில்
உன்
இருப்பு...

இது
குவாண்டம்
என்டேங்கிள்மென்ட்டோ!

### 4. காந்தம்

நான்
விலகி
நின்றாலும்...
உன்
மௌனம்
கூட
என்னை
இழுத்துக்
கொண்டே
இருக்கிறது...

என் 
இதயம்
இரும்பல்ல...

ஆனால்,
நீ
காந்தம்தான்!

### 5. வேதியியல்

உன்
பார்வை...

என்
மனதோடு
வினைபுரிந்ததும்
நான்
வேறொரு
மனிதன்...

இது
காதலின்
ரசாயன
மாற்றமோ!

### 6. சுற்றுப்பாதை

நீ
விலகி
சென்றாலும்...

என்
எண்ணங்கள்
மட்டும்
உன்னைச்
சுற்றியே
சுற்றுகின்றன...

நான்தான் 
நிலவா?

நீ
பூமியா?

### 7. கருந்துளை

உன்
கருவிழிக்குள்
ஒருமுறை
விழுந்தேன்...

வெளியே
வரவே
முடியவில்லை...

காதலின்
கருந்துளை
இவ்வளவு
ஆழமா!

### 8. கால விரிவு

நீ
அருகில்
இருக்கும்
நிமிடங்கள்...

நொடியாக
கடக்கின்றன...

நீ
இல்லாத
நொடிகள்...

யுகங்களாய்
நீளுகின்றன...

இதுவும்
ஐன்ஸ்டீனின்
கால விரிவோ!

### 9. அலைநீளம்

உன்
மௌனத்திற்கும்...

என்
இதயத்திற்கும்...

ஒன்றே
அலைநீளம்...

அதனால்தான்
வார்த்தைகள்
தேவைப்படுவதில்லை!

### 10. டி.என்.ஏ.

என்
கவிதைகளின்
ஒவ்வொரு
எழுத்திலும்...

ஒளிந்திருப்பது
உன்
பெயர்தான்...

என்
டி.என்.ஏ-வில்
கூட
நீயே
எழுதப்பட்டிருக்கிறாயோ!

பிரகாரத்தில் பூத்த காதல்

கோவிலுக்குள் 
என்னை 
ஈர்த்தது ...

வாசலில் 
கண்ட 
உனது 
காலணி !!

வசந்ததிற்காக

பூக்களை
படைத்து
விட்டேன்...

பூந்தோட்டத்தில்
சற்று
உலாவிவிட்டு வா!
உன்
சுவாசம் 
தீண்டிய பிறகுதான்...
வாசம்
பிறக்கிறது
பூக்களுக்கு!
==================
உன்
பார்வையில்
பிறக்கும்
மேகங்கள்...

உன்
புன்னகையை
சந்திக்கும்
கணத்தில்...
மழையாகி
பூமியெங்கும்
பொழிகின்றன!
==================
ஆயிரம்
கதைகள்
சொல்லட்டும்
இரவுகள்...

உனக்காக
ஒரு
நிலவை...
இரவின்
விளக்காக
எப்போதும்
சூடியிருக்கிறேன்
நான்!
==================
வசந்தங்களை
நீ
உருவாக்குவதில்லை...

உன்னைத்
தீண்டும்
ஒவ்வொரு
பருவமும்...
வசந்தமாகி
விடுகிறது!
==================
வசந்த காலம் 
எப்போது 
என்கிறாய் ..

வசந்தமே 
ஒரு 
வசந்ததிற்காக 
காத்திருக்கிறதோ !
==================

Wednesday, July 1, 2026

சிட்டுக்குருவி நீ நான்

சிட்டுக்குருவிகள்
கூடு கட்டுகின்றன...

நீயும் நானும் 
அமர்ந்திருக்கும்
இதயங்களைத் தேடி!
===========================
விடியலை
முதலில்
வரவேற்பது ...

கொக்கரக்கோ என்று 
சேவலா ?

இல்லை 
கீச் கீச் என்று 
சிட்டுக்குருவிகளா...?

விவாதித்து
பார்ப்போமா?

ஒரு 
பட்டி மன்றத்தில்!
===========================
சிட்டுக்குருவி
தன்
இணையை
அழைக்கும்
ஒவ்வொரு
குரலிலும்...

நீ என்னையும் 
நான் உன்னையும் 
அழைத்துக்கொள்கிறோம் !
===========================
பனி மலையின் 
உச்சியில் 
சிட்டுக்குருவி...

கொன்றை சூடியவன் ...
கங்கை சூடியவன் ...
இந்த பெயர்களோடு ...

சிட்டுக்குருவி சூடியவன் 
என்றும் 
அழைக்க 
ஆரம்பித்து விடுவார்களோ ?
===========================
சிறு நெல்மணியை 
கிடைத்துவிட்டதாம் ...

இனி நீ 
சிரிக்கலாம் அல்லவா !
===========================
சிட்டுக்குருவியின் 
ஒரு சிறகு நீ ..
மறு சிறகு நான் ...

பறந்தே 
அளந்து பார்க்கலாமா ?

இந்த 
பிரபஞ்சத்தை !
===========================
கூடு
அற்றவர்கள்
நாமல்ல...

சிட்டுக்குருவிகள்
கட்டும்
ஒவ்வொரு
கூடும்...

நமக்காகவே
காத்திருக்கும்
கைலாயம்தானே!
===========================
இயற்கையின்
ரகசியத்தை 
எங்கெங்கோ தேடுகிறார்கள் ...

இயற்கையின் 
இரகசியமே 
நீயும் 
நானும் 
என்றறியாமல் !

மௌனத்தின் மணியோசை

 1

உன்
கொலுசின்
மணியோசைதான்...

என்
இதயத்தின்
அழைப்பு மணி!

Monday, June 29, 2026

வண்ணத்துப் பூச்சியைத் தேடி

மலர்களின்
வண்ணங்களை
யார்
திருடிச்
சென்றார்கள்
என்று
தேடினேன்...

உன்
சிறகுகளில்
அவை
ஒளிந்திருந்தன!
======================
உனக்கும்
பூக்களுக்கு
அப்படியென்ன
தெய்வீகக்
காதல்?

நீ
தேனை
திருடவில்லையென்று 
பூக்கள்
பொய்
சத்தியமே
செய்கின்றனவே!
=========================
பூக்களின் 
தேனை 
மட்டும் 
திருடுவதாக 
நினைத்துக் 
கொள்கிறாய் ...

எப்போது 
திருப்பி 
கொடுப்பாய் 
எனது 
இதயத்தை !!
========================
காகிதப்
பூக்களில்
செயற்கைத்
தேனை
நிரப்பி
வைத்திருக்கிறோம்...

உனக்கு
அது
பிடிக்காதோ?

========================

நீ

அமர்ந்ததும்

பூக்கள்
மலர்வதில்லை...

பூக்கள்
தங்களை
அழகாகவும் 
உணர்கின்றன!
======================

ரோஜாவும்
மல்லிகையும்
காதலிக்கின்றனவோ...

நீ
காதல்
தூது
சுமக்கிறாயோ?

======================
உன்னை
வரைய
முயன்ற
வானவில்...

ஏழு
நிறங்களே
போதவில்லை
என்று
வெட்கப்பட்டு 
பாதியில் 
கலைகிறது !
======================
ஒவ்வொரு
பூவிடமும்
நீ
விசாரிப்பது...

தேனையா?

அல்லது
அதன்
இதயத்தையா?
======================
நான் 
காகிதங்களில் 
எழுதுகிறேன் ...

நீயோ 
பறக்கும்போது 
காற்றிலேயே 
எழுதி விடுகிறாய் ...

பல 
கவிதைகளை !!
======================
உன்
உதடுகளில் 
மலர்களில் 
மகரந்தத்தை 
கவர்ந்து  
எனக்கு
பரிசளிக்கிறாய்...
கவிதையாக !
======================
பூக்கள்
உனக்காக
காத்திருக்கின்றன...
நான்
உன்னைக்
காத்திருக்கிறேன்
சில 
பூக்களோடு !
======================
பூமிக்கு
நிறங்களை
கற்றுக்
கொடுத்தது
ஓவியன்
அல்ல...
நீதான்!
======================
பிள்ளைகளின்
கைகளில்
பிடிபட்ட
நீ...

சில
நொடிகளில்
அவர்களின்
நினைவாகி
விடுகிறாய்!
======================
உன்
வாழ்நாள்
சிறியது...

ஆனால்
நீ
கடந்து
செல்லும்
ஒவ்வொரு
தோட்டமும்
நீண்ட
நினைவுகளை
சுமக்கிறது!
======================
வண்ணத்துப்
பூச்சிகள்
குறைந்ததால்...

மலர்களே
இப்போது
தங்கள்
அழகை
யாருக்குக்
காட்டுவது
என்று
தெரியாமல்
தவிக்கின்றன!
======================
கள்ளுண்ண
பனைகளை 
வளர்க்க 
வேண்டுமாம் ...

நீ
கள்ளுண்ண
பூந்தோட்டங்களை
ஏன்
மறக்கிறார்கள் !
======================
உன்
சிறகின்
ஒரு
துடிப்பு...

பூமி
இன்னும்
உயிரோடு
இருக்கிறது
என்பதற்கான
கையொப்பம்!
======================
நீ
வராத
வசந்தத்தில்...

பூக்கள்
மலர்கின்றன
ஆனால்
புன்னகைக்கவில்லை!
======================
நூலகம்
முழுவதையும்
வாசித்தும்...

என்
கவிதைகள்
இன்னும்
காகிதத்திலேயே!

நீயோ...

ஒரு
தேன் துளியைச்
சுவைத்துவிட்டு

வானமெங்கும்
கவிதையாகப்
பறக்கிறாய்!
======================
உன்னை
வாகனமாக
ஒரு
கடவுள்
வரித்திருந்தால் ...

உனக்கும்
கிடைத்திருக்கும் 
கோவிலில் 
ஒரு
சிலை!

காதலின் ஆறுதல் அகராதி

கூந்தல்
பூக்கள்
வாடி உதிர்கின்றன 
என்று
வருந்தாதே...

உன்னை
அலங்கரிக்கும் 
பாக்கியத்தை
மற்ற
பூக்களும்
பெறட்டுமே
என்று...
அவை
வழிவிட்டிருக்கலாம்!

இயற்கையின் இரகசியம் நீ

ரோஜாவை 
செடியிலிருந்து 
பிரித்து 
பாவம் 
தேடினேன் ..
அதனை 
உன் 
கூந்தலில் 
சேர்த்து 
புண்ணியம் 
நாடினேன் !
==========================
தோட்டத்து 
பூக்களின் 
பிறப்பு 
ரகசியம் 
தேடினேன்  ...
உன் 
கூந்தலை 
காணும் வரை!
==========================
உன்
முகத்தை
ஒருமுறை
கண்டபின்...
நாட்காட்டியில்
பௌர்ணமி
நாளை
நான்
தேடுவதே 
இல்லை!
==========================
தேனீக்களின்
கூட்டை
நான் 
எதற்காக 
தேட வேண்டும் ...
உன்
இதழ்கள்தான்
இருக்கிறதே!
==========================
தென்றலை 
குறித்து 
கவிதைகளை 
எழுதி 
குவித்து வந்தேன் ...
உன் 
மூச்சுக்காற்று 
படும் வரை !!
==========================
நகைக்கடையில் 
முத்துக்களை 
ஏறெடுத்தும் 
நான் 
பார்ப்பதில்லை ..
உன் 
புன்னகையைதான் 
கண்டிருக்கிறேனே  !!
==========================
வண்ணத்து 
பூச்சிகளிடம் 
எனக்கிருந்த 
காதல் 
இடம் மாறிவிட்டது ...
உன்னை 
போச்சம்பள்ளி 
புடவையில் 
கண்ட பின்பு !!
==========================
சந்தனத்தின்  
விளம்பரங்களை 
காணும்போது 
சிரிப்புதான் 
வருகிறது ...
உன் 
ஸ்பரிசம் 
அறிந்த பின்பு !!
==========================
கவிதையைத்
தவிர
வேறெதையும்
பிரசவிக்க
என் பேனா
மறுக்கிறது...
ஒவ்வொரு
நொடியும்
என் மனம்
உன் நினைவுகளை
பிரசவிப்பதால்!
==========================
உனது
நினைவு
மலர்களில்
தேனுண்டு
மயங்கிக்
கிடக்கிறது
எனது
இதயத்தும்பி !

Saturday, June 27, 2026

தும்பியைத் தேடி

பூக்களை 
தேடித்தான் 
வருகிறது 
என்று 
நினைத்திருந்தேன் ...

ஆனால் ...
நீ 
வரும்போது 
வந்துவிடுகிறது 
இந்த 
தும்பி ...
===========================
என் பேனா
காகிதத்தில்
இதழ் பதிக்கும்...
நீ...
பூவின் மீது
இதழ் பதித்தால்!
============================
தேனின்
துளிகளை
சேமித்து வைத்து
காத்திருக்கின்றன
சில
பூக்கள்...
வருவாயோ...?
இனிமையின்
துளிகளை
என்னுள்
சேமித்து வைக்க!
============================
நீ
சிறகசைக்க
காத்திருக்கின்றன
எங்களின்
அசுரக்கண்களுக்கு
தப்பிய
சில
குளக்கரைகள்...
============================
நீ
வட்டமடித்து
பறக்கும்
அழகைத் தேடி
வானெங்கும்
அலைகின்றன
என்னைப்போல
சில
பித்து பிடித்த
மேகங்கள்...
============================
உன்னைப் போலவே
நானும்
தேடுகிறேன்
மழை முடிந்ததும்
வயல்வெளியில்
ஓடிக்கொண்டிருந்த
என்
குழந்தைப்
பருவத்தை!
============================
பூச்சிக்
கொல்லி
மருந்துகள்தானே
போட்டோம்!!
நீயும்
பூச்சி என்பதை
மறந்தோமோ!?
============================
சதுப்பு 
நிலங்களை
நிரப்பி
உனக்கான
தொட்டிலை
அதில்
புதைத்து
விட்டோமோ!?
============================
பூக்கள்
குறைந்ததால்
உன்
படைப்பையும்
பிரம்மன்
குறைத்து
விட்டானோ!?
============================
எங்கள்
அவசர
வாழ்க்கையின்
ஓட்டத்தில்
இயற்கை
உதிர்ந்து 
விட்டதால்
உனக்கான
வான்வழிகள்
வெறுமையாகி
விட்டனவோ!?
============================
என்சைக்கிளோபிடியாவில்
"தும்பி"
என்ற பக்கத்தை
சேர்த்து விட்டோம்..
வருங்காலம்
உன்னை
வரலாறாய்
படிக்க!!
============================
எனது
கவலையெல்லாம்..
எப்படி
வரம் தருவான்
ஈசன் ...?
நீ
தேனுண்ணாத
பூக்களால் 
பூஜித்தால் !
============================

வாசல் காத்த வசந்தம்

வைகறையில்
வெள்ளி நிலா
விடைபெறும்
வேளையிலே...

வாசலெங்கும்
பெருக்கி வைத்து
வாசம் தூவி...

உன்
வரவை வேண்டி
காத்திருப்பது 

வாசற்படி கூடத்தான் !
==============================
ஆற்றங்கரை
மணல் மேலே ...

தினம் தினம் 
கோலம் வரைந்தேன்
உன்னை வரவேற்க ...

ஒவ்வொன்றிலும்
பதிந்திருந்தது ...

உன்
பாதச்சுவடுகள்தான்!
==============================
செம்பொன் நிறம் பூசி 
வியந்து பார்க்கிறது
கிழக்குவானம் ...

உன்
வரவை
தினம் 
கனவு காணும் ...

என்
கன்னங்களில் 
வெட்கத்தில்
செம்பருத்தி
பூப்பதை!
==============================
வரப்போரம்
நெற்கதிர்கள்
தலையசைத்து
பேசுகின்றன...

"எப்போது
வருவான்?"
என்று...

நெல்லுக்கூட
உன்
வரவுக்காகவே
விளைந்திருக்கிறது!
==============================
கிணற்றிலிருந்து
குடம் நிறைய
தண்ணீர்
எடுத்து வைத்திருக்கிறேன் ...

உன்
தாகம் தீர்க்கவே ...

நீ 
அறிவாயோ 
என் 
தாகம் !
==============================
தயாராகத்தான் 
இருக்கிறது 
அறுசுவை உணவு  ...

நீ வந்து 
கொஞ்சம் 
பசியாறினால்போதும் ...

ஆறிவிடும் 
என் 
காதல் பசி !
==============================
அந்தி
வந்து விட்டது ...

அந்தி மந்தாரையும் 
பூத்து விட்டது ...

ஓரறிவு  
மலர்கள் கூட 
காலம் தவறுவதில்லை ..

நீயோ !
==============================
மாலை நேரம்...

மேற்கு வானம்
சோர்ந்து
சாய்ந்தபோதும்...

சோர்வறியாமல்
வாசல் நோக்கி
நீள்கின்றன...

உன்னைத்
தேடும்
என் விழிகள்!
==============================
ஆலமரக்
கிளைகளெல்லாம்...

இணை சேர்ந்த
குருவிகளின்
கீதம்...

ஒற்றைக்
குருவியாய்
தவிக்கும்
என் மனதில் மட்டும்...

உன்
பெயரின் கீதம்!
==============================
தெருவோர
செட்டிக்கடை
விளக்குகள்...

ஒன்றன்பின்
ஒன்றாய்
அணைந்தாலும்...

உன்
வரவை நாடும் 
என் நெஞ்சின்
நம்பிக்கை 
விளக்கு மட்டும்...

அணையவே
மறுக்கிறது!
==============================
காத்திருந்த
காலமெல்லாம்...

காற்றோடுதான்
பேசிப்
பொழுதைக்
கழித்தேன்...

அந்த 
காற்றுகூட 
கொண்டு சேர்க்கவில்லையோ 
எனது காதலை !
==============================
நான்
மறைந்து
போனாலும் ...

என்றாவது 
ஒரு நாள் 
நீ வரும்போது ...

வாசலெங்கும் 
விரிந்து கிடைக்கும்
என்
கூந்தல்
மலர்களிடம்
கேட்டுப்பார் ..

மலர்கள் சொல்லும் 
என் காத்திருப்பின் 
சாட்சி !
==============================
காலம்
கடந்து...

நீ
வரும்
நாளில்...

வாசல்
மலர்கள்
உன்
பாதங்களை
தீண்டி
சுட்டுவிட்டால்...

கோபம்
கொள்ளாதே.

மலர்களும் 
அறியும் ...

என்
காத்திருப்பின்
காயங்களை!

சோளக்காட்டு பொம்மை

பறந்தாடும்

வண்ணத்துப்பூச்சி

உன் சேலை

நிறம் தேடும்!


விடியற்காலை

பனித்துளியும்

உன் சிரிப்பை

கடனாய் கேட்கும்!


வரப்போரம்

நீ நடந்த

பாதச்சுவடும்!

மழை நீரில் 

கரையாமல் 

மனதை கரைக்கும்!


வயல் காக்கும்

சோளக்காட்டு பொம்மை 

என் காதலையும் 

மௌனமாய் காக்கும்!


Monday, June 15, 2026

வேலவா முருகா

 

பல்லவி

வேலவா முருகா என் வாழ்வின் தீபமே
வெற்றியின் பாதையில் வழிகாட்டும் தெய்வமே
மயில்மேல் வந்தருளும் மலரடி நாயகா
மனமெங்கும் நீயன்றி வேறில்லை முருகா!


அனுபல்லவி

ஆறுபடை வீடுகள் அருளொளி வீசுதே
ஆனந்த கீதங்கள் அகமெங்கும் பாடுதே
சூரனை வென்ற உன் சுடர்வேல் காப்பதே
சோதனை வந்தாலும் துணையாக நிற்பதே


சரணம் 1

பழனி மலைமேல் நீ பசுமையின் அழகாய்
பக்தர்கள் இதயத்தில் பரிவொளி மழையாய்
கழுகுமலை காற்றிலும் உன் நாமம் இசையாய்
கண்ணீரைத் துடைத்திடும் கருணையின் நிழலாய்

கந்தனே குமரனே கற்பக மரமாய்
கைதூக்கி வேண்டினால் கனவுகள் நனவாய்
செந்தமிழ் பாடலின் செழுமையாய் மலர்ந்து
சிந்தையில் என்றும் நீ சிரித்திடும் நிலவாய்


சரணம் 2

திருச்செந்தூர் அலைகளில் திருநாமம் ஒலிக்க
திருப்பரங்குன்றத்தில் தேவர்கள் துதிக்க
பழமுதிர்சோலையில் பறவைகள் இசைக்க
பக்தியின் பாதையில் பாவங்கள் கரைய

வள்ளியும் தெய்வானையும் அருகினில் கொண்டு
வானவர் போற்றிடும் வடிவழகோடு நின்று
வெள்ளியெனத் தூய மனம் வேண்டுவோர்க்கெல்லாம்
வேலொளியாய் வந்தருளும் வெற்றிவேல் முருகா! 🎶🙏🏻

Sunday, June 14, 2026

மீண்டும் கிராமியம்


மல்லிகைப்பூ வாசத்தத்தான்
மனசுக்குள்ள நிரப்பி வச்ச
மழைத் துளிய கன்னத்திலே
முத்தமிட்டு சிதற வச்ச

கல்லு மேல உக்காந்து நானும்
கனவுக்குள்ள மிதக்க வச்ச
கண்ணுக்குள்ள ஓரப் பார்வை
கட்டி போட்டு இழுக்க வச்ச

வெள்ளை நிலா வெளிச்சத்துல
வெட்கம் பூக்க பழக்கி வச்ச
வீதி முழுக்க உன் பேரத்தான்
வீணையாட்டம் இசைக்க வச்ச

ஆத்தோரம் துணி தொவைக்க
போற புள்ள தங்கப் புள்ள
ஏத்தி வச்ச என் ஆசையெல்லாம்
ஏத்துக்கிட்டு வாடி புள்ள!

---

நெல்லு வயல் காற்றத்தான்
நெஞ்சுக்குள்ள வீச வச்ச
நேரம் காலம் மறந்துபோக
நெத்திக்குள்ள பூச வச்ச

தென்னை மர நிழலுக்குள்ள
தேடித் தேடி அலைய வச்ச
தேனடை சிரிப்புலதான் 
தேகம் மொத்தம் கரைய வச்ச

சின்ன சின்ன கோபத்தால
சித்திரமாய் வதைக்க வச்ச
சீலை ஓரம் காத்தாட 
சிந்தனைய பறக்க வச்ச

கோவில் பாதை நடந்து போற
கொக்கு நடையழகுப் புள்ள!
கூப்பிட்டதும் திரும்பிப் பார்த்தா
கோடி சந்தோசம் கூடும் புள்ள!

---

ஆலமரத்து விழுதைப் போல
ஆசை நெஞ்சில் ஊன்றி வச்ச
ஆத்தங்கரை மணலப் போல
ஆயிரம் கனவ தூவி வச்ச

மீனு துள்ளும் குளத்தோரம்
தெனம் வந்து நிற்க வச்ச
மேக நிழல் போல மனசை
மெத்த மெத்த நனைக்க வச்ச

ஓரப்பார்வை பாத்து போற 
பாதி உயிர எடுத்துப் போற 
பாவாடை தாவணியில 
பருவக் காதல் வெதச்சு போற 

காட்டுப் பாதை தனியா போற
கருங்குயிலே மானே புள்ள
கைய பிடிச்சு நடக்கத்தானே
காத்திருக்கேன் வாடி புள்ள!

சக்தி பூக்கடை

பூக்கடை
வாசலில்
நிற்கிறேன்...
பூக்களின்
வாசமா
உன்
வாசமா!?
==================
பூக்களை
முழம் போட்டு
அளக்கிறாய்...
ஆனால்
உன்
அழகை
நான்
எதில்
அளப்பது!?
==================
மல்லிகை
சரங்கள்
தொங்குகின்றன...
உன்
சிரிப்புதானோ 
அவற்றின்
விலைப்பட்டியல்!?
==================
வாடாமல் இருக்க 
பூக்களுக்கு
தண்ணீர்
தெளிக்கிறாய்...
என்
இதயத்திற்கு
எப்போது
காதலை 
தெளிப்பாய் !?
==================
கூடையெங்கும்
பூக்கள்...
ஆனாலும்
என்
பார்வையை 
பறிப்பது
உன் 
கூந்தல் மலரே !
==================
பூக்களை
கட்டுகிறாய்...
அதோடு
என்
மனதையும்
கட்டிவிடுகிறாய்!
==================
மலர்களுக்கு
முள்
இருக்கிறது...
உனக்கு
விழிகள்
இருக்கின்றன!
==================
வாசம்
விற்கும்
கடைதான்...
ஏனோ
என்
மூச்சையே
வாங்கிக்
கொள்கிறது!
==================
பூக்கள் 
வகை வகையாய் 
அழகு !
நீயோ 
எல்லா 
வகை 
பூக்களும் 
சேர்ந்த 
அழகு !
==================
பூக்கள்
காலையில்
மட்டுமே
மலர்கின்றன...
நீயோ
எந்நேரமும்!
==================
கூடையில்
பூக்கள்
குறைந்துகொண்டே
போகின்றன...
என்
காதல்
அதிகரித்துக்
கொண்டே
போகிறது!
==================
பூக்காரி
என்பதாலா ...
என்
மனதிற்குள்
பூந்தோட்டத்தையே 
போடுகிறாய் !?
==================
ஒரு
ரோஜாவிற்கு
விலை
கேட்டேன்...
உன்
புன்னகையை
காட்டிவிட்டாய்!
எங்கே 
போவது !?
அவ்வளவு 
பணத்திற்கு !?
==================
பூக்கள்
வாடினாலும் ...
அவற்றை
விற்ற
உன்
நினைவு
வாடாதே!
==================
விலை 
மதிப்பில்லாதது 
எது ?
உன் 
கைகள் தரும் 
பூக்களா !?
உன் 
கூந்தல் 
மலர்களா !?
==================
நன்றாக 
பார் ...
உன் 
கூந்தலேறிய 
பூக்கள் 
மகிழ்ச்சியிலும் ..
கூடை 
மலர்கள் 
தவிப்பிலும் 
இருப்பதை !!
==================
உன் 
புன்னகை 
மலர்களை 
கண்டபின்னும் 
உன் 
கூடை 
மலர்களை 
விரும்புபவர்கள் 
இருக்கிறார்களா 
இந்நாட்டில் !?
==================
பக்தனாக 
வந்தவனை 
கவிஞனாக்கி
விட்டாய்...

==================
வா !
சகி !
நீயே 
என் 
கவிதைகளின் 
முதல்
வாசகி !! 
==================
கோவிலுக்குள் 
போய் வருபவர்கள் 
பக்தர்களாக 
வருகிறார்களோ 
இல்லையோ !!
உன் 
கடையை 
தாண்டும்போது 
கவிஞனாகி 
விடுகிறார்கள் !!
==================

ஆத்தோரம் ஆலமரம்

ஆத்தோரம் ஆலமரம்
மரத்தடியில் நீ நிக்கையிலே
ஆலிலையில் பிறந்த காத்து
உன்னை மட்டும் தொட்டுச் செல்ல
எனக்குள்ளே வெம்மையடி!

வயலோரம் வரப்புமேல
வசந்தமா நீ நடக்கையிலே
பச்சை நெல்லின் அசைவுக்கெல்லாம்
உன் கொலுசின் ஓசை வந்து
மெட்டுக்கட்டி பாடுதடி !

பனிமலையின் அடியோரம் 
கனிவோடு நீ நடந்தால் !
கால் கொலுசின் நாதத்திலே 
கயிலையும் கரைந்திடுமோ !?

மாலை நேரம் மேற்குவானம்
மஞ்ச நிறம் பூசிக்கிட்டு
சூரியனும் மறையையிலே
உன் கன்னச்சிவப்பழகு 
அந்தி வானை வெல்லுதடி!

மாலை நேரம் பனி மலையில்  
மஞ்சள் ஒளி சாய்கையிலே
அந்தி வானின் செவ்வழகும் 
உன்னழகில் பிறந்ததன்றோ!?

தென்னையடி தோட்டத்திலே 
குடம் தூக்கி நீ வருகையிலே
கெணத்திலுள்ள தண்ணியெல்லாம்
உன் மொகத்த பாத்துபுட்டு 
அலையடிச்சு சிரிக்குதடி!

மனம் என்னும் ஏரியில் ..
ஆசை என்ற கற்களை ..
அள்ளி அள்ளி வீசுவார் !
மதியிழந்து வாடுவார் !

மாசு தொடா நீர்போல ...
தெளிவோடு மனமிருந்தால் ..
உனதருள் அலையும் வீசாதோ !!
மனதுள் கயிலாயமும் மலராதோ !! 

பூந்தோட்டப் பாதையிலே
புன்னகைத்து நீ நடக்கையில
உன் கூந்தல் வாசம் கண்டு 
தோட்டத்து பூக்களெல்லாம் 
மதி மயங்கி பார்க்குதடி !

பூக்களாய் பிறப்பதற்கே
புண்ணியம் 
வேண்டுமெனில்...
உன் 
நந்தவனத்தில் மலர
பெருந்தவமும் வேண்டுமோ !?
உன் கூந்தலை 
அலங்கரிக்கும் பேறு
எத்தவத்தால் கிட்டுமோ?

சாரல் மழை பெய்யையிலே
சன்னலோரம் நீ நிக்கையிலே
தெறித்து வந்த மழைத்துளிக்கு 
உன் உதட்டில் கெடச்ச சொகம்
எனக்கும்தான் கெடைக்குமோடி!

அமுதம் எனப்படுவது ..
பாற்கடலில் 
பிறந்ததோ !?
இல்லை ...
உன் 
இதழ் தொட்டு  
சிதறிய 
சிறு 
சாரல் துளியோ !?

நதியோரம் மணல்வெளியில்
நாணலாய் நீ நடக்கையிலே
உன் பாதம் பட்ட இடமெல்லாம்
சின்னச் சின்ன பூக்களாக
மனசுக்குள்ள மலருதடி!

இமயத்தின் 
வெண்பனியில் ...
இளங்காற்றாய் 
நீ நடக்கையிலே ...
உன் காலடி 
பதித்த இடமெல்லாம்
பூப்பது ...
மலர்களா  !?
என் இதயமா !?

தென்றலோடு வந்த நிலா
தேடி உன்னைப் பாக்கையிலே
நிலவுக்கே வந்த மயக்கம்
என் விழிக்கும் வந்ததாலே
மனசெல்லாம் காதலடி!

சடை மேல் 
அமர்ந்த நிலா ..
சக்தி உன்னை 
கண்டதாலே ...
உன்னழகில் 
மதி மயங்கி ..
நாணிக்கொஞ்சம் 
தேய்ந்ததோ  !?

Monday, April 20, 2026

தோஷம்

காதல் தோஷம்
*************************************************

உன் 
இதழோரம் 
துளிர்த்த 
வியர்வை 
துளியொன்று 
பூமியை தொட்டது ...

பாலைவனத்தில் 
பெய்த 
மழை போல 
குதூகலித்து போகிறது 
பூமி !!

*************************************************

சூடு 
தாங்க 
முடியவில்லையாம் ..

உன் 
நிழலில் 
இளைப்பாறவா 
என 
இறைஞ்சுகிறான் 
சூரியன் !!

*************************************************

மழையை 
ரசிப்பதாக 
நினைத்துக்கொள்கிறாய் !

உன்னை 
ரசிப்பதற்காகவே 
பெய்கிறது 
மழை !

*************************************************
நீ 
வாசல் தெளிக்கும் 
அழகில் இருந்து 
கற்றுக்கொண்டது 
மேகம் ...

சாரல் மழை 
பொழியும் 
வித்தையை !!
*************************************************

உனக்கு 
சிரமம் வேண்டாமென 
வாசல் தெளித்து 
போகிறது சாரல் !!
மலர்களால் 
கோலமிடுகிறது 
மகிழ மரம் !!

*************************************************

இருவரும் 
தனித்தனியாக 
குடை 
கொண்டு வந்தால் ..

எப்படி வரும் !?

உன்னையும் 
என்னையும் 
ஒரு குடையில் 
காண துடிக்கும் 
மழை !!

*************************************************
உன் 
முகவரி தேடிய  
முகிலினங்கள் ...

உன்னை கண்டதும் 
மழையாய் 
பொழிகின்றன 
ஆனந்த கண்ணீரை !! 
*************************************************
நதியாய் ஓடி ...
அருவியாய் விழுந்து ...
கடலில் ஆவியாகி ..
மேகமாய் மிதந்து ..
மழையாய் உன்னை தொட்டு ..
மீண்டும் நதியாய் ஓடி ...

உன்னை 
ஒருகணம் 
தொட்டு பார்க்கத்தான் 
இந்த தண்ணீர் 
இத்தனை பாடுபடுகிறதா !!?

*************************************************

எனது  
காகிதத்தின் 
கிறுக்கல்கள்  ...

உன் கைபட்டு 
மேடையேறுகின்றன 
கவிதை கப்பலாய் !!

*************************************************
சாரல் மழையா ?
சிறு மழையா ?
பெரு மழையா ?
கோடை மழையா ?
அடை மழையா ?

இவை எதுவுமல்ல !!

இது 
கவிதை மழை ....

நீ 
நனைகிறாயே !!
*************************************************
நான் 
உருவமற்ற 
பொருளின் 
துளி  !!

நீ 
அளவில்லாத 
ஆற்றலின் 
துளி !!

ப்ரபஞ்சமெங்கும் 
பொழிகிறது 
நம் 
காதல் மழை !!
*************************************************
என்றும் 
எங்கும் 
உனது ஆட்சி !!

வேறு 
கதியேது 
எனக்கு !?

உனது 
கட்சியன்றி !!
*************************************************
அந்தி 
மாலை நேரம் ..
பூ விரிந்த 
சோலை ஓரம் ...
தென்றல் 
சூழும் நேரம் ...
துள்ளும்  
உள்ளம் ஏனோ ?
இதுதான் 
பருவ காலமோ !?
*************************************************
இசை பாடும் 
குயிலை போலே ..
நடமாடும் 
மயிலைப்போலே ..
குணம் மாறி 
காண்பதேனோ !
ஒரு வேகம் 
தோன்றலேனோ  ?
இதுதான் 
பருவ காலமோ !?
*************************************************
வாய் மொழிகள் 
மடிந்து போகும்  ...
மை விழிகள் 
கவிதை பேசும்  ..
நாள் முழுதும் 
கனவு காணும் ...
ஒரு காலம் 
வந்ததேனோ  !!
இதுதான் 
பருவ காலமோ !?
*************************************************
மழையில் 
சேலை 
நனைந்து 
விட்டதென்று 
கூச்சம் 
கொள்ளாதே !!

வார்த்தைகளால் 
நெய்து 
கொண்டிருக்கிறேன் ...
உனக்கான 
கவிதை 
சேலையை !!

*************************************************

மழை இல்லாமல் நனைக்கின்றேன்
வெயில் இல்லாமல் காய்கின்றேன

*************************************************

Tuesday, February 17, 2026

வள்ளி


உன்னை 
காணும்போதெல்லாம் 
என் விழிகளும் 
இதயமும் 
கூட்டணி அமைத்து விடுகின்றன ..
என்னை விட்டு 
உன்னோடு !!
**************************

உன் 
விரல் மையினால் 
நாட்டின் தலையெழுத்து 
மாறுகிறதோ இல்லையோ ..

உன் 
விழி மையினால் 
மாறி விட்டது 
என் 
தலையெழுத்து !!
**************************

ஓட்டு போடும்முன் 
உணர்த்தி விட்டார்கள் 
வாக்காளன் நிலையை ...
கறுப்பு மையினால்
விரலுக்கு  
நாமம் போட்டு !!
**************************
சற்றே
உற்றுப்பார்...

உன்னை
கடந்து செல்ல 
மனமின்றி 
ஆற்று நீர் கூட
ஓடாமல் 
நின்று விட்டது!!
******************************

மொழியை 
திணிப்பதாக 
புகார் சொல்கிறார்கள் !!

ஒவ்வொரு நொடியும் 
பார்வையாலேயே 
காதல் மொழியை 
என் மீது 
திணிக்கிறாயே ..

யாரிடம் 
புகார் சொல்வது 
நான் !!
******************************
உனது 
அன்பின் 
துளிகள் 
போதாதோ 
எனது 
வாழ்க்கை சக்கரம் 
சுழல்வதற்கு !!
******************************
விலை மதிப்பில்லா 
உன் 
ஒவ்வொரு துளி 
அன்பிலும் 
சுழல்கிறது 
எனது 
வாழ்க்கை சக்கரம் !!
******************************
அனாதையாகத்தான் 
இருந்தேன்...

நீ
பிறக்கும்வரை!!
********************************
கட்டத்தில் இருக்கும்
ராணியே
கலங்கடிக்கிறது...

எப்படி
சமாளிப்பேன்....!?
எதிரிலிருக்கும் 
ராணியை!?
**********************************
Like பட்டன் அழுத்தவில்லை....
Follow பட்டனும் அழுத்தவில்லை..
உன்னை 
தொடர ஆரம்பித்து விட்டதே...
என் இதயம்!!
*******************************************
எந்த
மலையையும்
கடக்குமென்று
சொன்னானே ....!!?
உன்
வீட்டை
கடக்க முடியாமல்
திணறுகிறதே ...
இந்த
வண்டி..!!!
*******************************************
**********************************************
தவறாக
சொல்லி விட்டான்
புத்தன் ...
உன் மீது கொண்ட
ஆசையே
என்
இன்பத்துக்கு
காரணம்!!
**********************************************
கோபுரத்தை
ஏன்
அங்கே 
கட்டியிருக்கிறார்கள் ...?
நீ
இங்கிருக்க...!!
************************************************
சக்தி....
என்று
இறுமாப்பு 
கொள்ளாதே!!

தோற்றே போவாய் ...
என் 
காதலின்
சக்தியிடம்!!
************************************************
அழகு 50 கிலோ!
மொத்தம் 50 கிலோ!!
************************************************

நிலவில்லா
அமாவாசையில்தான்
தீபாவளியாம்!!
நம்
வீட்டில் 
தீபாவளி கிடையாதாம்...
நிலவாய் நீ
வீட்டிலிருப்பதால் !!

பஞ்சாங்கமே
சொல்கிறது!!
**********************************************

நகை
அழகாகி
விட்டது ...
உன்னை
அணிந்து
கொண்டதால்!!
**********************************************
திருஷ்டி
கழிக்கும் சாக்கில்
உன்னை
பார்த்து விடலாமென
பூசணிக்காயாய்
பிறக்கும்
வரம் கேட்டு
தவமிருக்கின்றன
சில ஆன்மாக்கள்
***********************************************
பெண்ணைத்தானே
காதலிக்க
விரும்பினேன் ...?
காதலே
பெண்ணாக
வந்தால்
என்ன செய்வேன்...?
***********************************************
அது சூரியன்தான்...
உனக்கு
வியர்க்கக்கூடாதென்று 
சந்திரனைப்போல
வேடமணிந்து 
வருகிறான்...
***********************************************
விக்ஸ் தயாரிப்பவன்
புத்திசாலிதான் ...
உபயோகிக்கும் முறை
என்று தலைப்பிட்டு...

சக்தியின் கைகளால்
போட்டுக் கொண்டால்
பலனளிக்கும்

என்று எழுதியிருக்கிறானே!!
***********************************************
கவிதைப் புத்தகத்தின் 
அட்டையில்
உனது படத்தை
போட்டேன் ...

அட்டைப்பட கவிதையே
அபாரம் என்று
சொல்கிறார்கள் ... 
*************************************************
பூக்களின்
தலைநகரம் 
எதுவென்று 
கேட்டிருக்கிறார்கள்...

எழுதிவிடவா..
பதிலை !!?
உன்
கூந்தலென்று!!
***************************************************
வரம் கேட்டு
தவமிருப்பவர்களிடம் 
முதலிலேயே 
சொல்லி விடுகிறேன்...
இரண்டு வரங்கள்
கொடுக்க முடியாதென்று...
சாகாவரம்...
உன்னை விட
அழகாகும் வரம்!!
*****************************************************
சர்வாதிகாரம்
நல்லதென
சொல்கிறதே..
உனது
காதல் அகராதியின்
பக்கங்கள்!!
*****************************************************
இரவு
ஏன்
இவ்வளவு
நீண்டதாக
இருக்கிறது?
தூங்கும் உன்னை
தாலாட்ட
மெதுவாக
சுற்றுகிறதோ
பூமி!!?
***************************************************

பள்ளிக்கூடங்களையெல்லாம் 
மூடிவிடலாமா ..!!?

உனது  
பார்வைதான் 
எல்லோரையும் 
கவிஞனாக்கி 
விடுகிறதே !!

******************************************************************
நீ 
நடந்து 
வரும்போது
அழகாகி 
விட்டது ...
இந்த  
பூந்தோட்டம் !!

******************************************************************

அழகிற்கு 
எதற்கு 
ஒப்பனை ?

ஒருவேளை 
அழகுசாதன 
பொருட்களுக்கு 
அழகூட்டுகிறாயோ !!

******************************************************************

நான்கு அல்ல ..

ஐந்தாவதாய் 
ஒரு 
யுகமும் 
இருக்கிறது ...

நீ 
மௌனமாய் 
இருக்கும் 
மணித்துளிகள்தான் 
மவுன யுகம் 
என்று 
ஐந்தாவது யுகமாய் !!

******************************************************************

என்ன 
பாவம் 
செய்தன ...?

உன் 
பெயரிலுள்ள 
எழுத்துக்களை 
தவிர 
பிற 
எழுத்துக்கள் !!?

******************************************************************

மேடை 
ஏறிவிட்டு 
கவிதை 
சொல்லாமலே 
"சிறந்த கவிதை"
என்று 
பரிசு 
வாங்கி விடுகிறாய் 
நீ !

******************************************************************
இப்பிபஞ்சத்தையே 
உனக்கு
பரிசாகத்தர 
எண்ணியிருந்தேன்...

பிரபஞ்சமே 
நீதான்
என்றறியாமல்!!!
******************************************************
இன்று
நீ மௌன விரதம்
இருப்பதை
உன்
விழிகளுக்கு
தெரிவிக்கவில்லையா..?

எதை எதையோ பேசி
பாடாய் 
படுத்துகிறதே!!!
*******************************************************

அணு ஆயுதப்போர்
வந்துவிடுமோவென 
அஞ்சுகிறார்கள்...

உன்
மௌனத்தை விட
கொடிய ஆயுதத்தை 
யார்
கண்டு பிடிக்க 
போகிறார்கள்..!!?
********************************************************

வருடங்களோ 
யுகங்களோ 
கடந்தாலும் ...
ஒவ்வொரு 
நொடியும் 
இந்த பிரபஞ்சம் 
தன்னை 
புதுப்பித்துக்கொண்டே 
இருக்கிறது ...
நமது 
அன்பை போல !!

****************************************

Saturday, January 24, 2026

சிவசக்தி

கார்மேகமும் 
வர்ணம் பூச
முயல்கிறது ...

உன் 
வருகைக்கு 
கருநிறம்
காட்டினால் 
எதிர்ப்பாகி
விடுமாம்!!
************************************************
கவிஞனாகும்
வரம்
கேட்டான்
ஒருவன் ...

கொடுத்து
விட்டேன் ..

உன்னைப்போல்
ஒரு
காதலியை!!
*************************************************
இலக்கணம்
எழுதிக்கொண்டிருக்கிறேன்..
காதலுக்கு ...

என்ன
எழுதுவதென்று
தெரியவில்லை ...

உன் 
பெயரைத்தவிர ...
************************************************
சூரியனுக்கு
உன் மீது
என்ன
கரிசனமோ!!
உனது
நிழலில் கூட
கருமை தவிர்த்து
வர்ணஜாலம்
காட்டுகிறானே!!
**************************************************
உன்
பார்வையே
ஆக்கவும்
அழிக்கவும்
செய்கிறதே !!

நான்
என்ன
செய்யப்போகிறேன்..?
இந்த
சூலத்தால்!!
***************************?***********************
என் 
அசைவை 
சக்தி தாண்டவம் 
என்றல்லவா 
சொல்ல வேண்டும் !

சக்தியின்றி 
இங்கே 
சிவம் 
ஜடம்தானே !
***************************?***********************
வார்த்தை கட்டுகளாய் 
நான் எழுதியதை 
நீ 
வாசிக்க ஆரம்பித்தாய் !!

கவிதை பிறந்தது !!
********************************************************
தொலைந்தவர்களை 
மை போட்டு 
பார்ப்பார்களாமே !!

நீ 
கண்ணில் 
மை போட்டதால்தானே 
நான் 
தொலைந்தே 
போனேன் !!
********************************************************
உன்
விழி சொல்லும்
கவிதைகளுக்கு
விளக்க உரை எழுத
திணறி
தவிக்கிறது
இந்த AI
**************************(******************
உன் 
பெயரை 
உச்சரிக்கும் 
ஒவ்வொரு 
நொடியும் 
இதயம்  
புது மொழியை 
கற்று கொள்கிறது !
********************************************************
உன் 
கண்கள்தான் 
நொடிக்கொரு 
கவிதை எழுதுகிறதே !

ஓலைச்சுவடியில் 
என்ன 
எழுத போகிறாய் !?
***************************************************
என் 
சூலாயுதத்தை விட 
பலமாக 
தாக்குகிறதே !!

அப்படி 
என்னதான் 
வைத்திருக்கிறாய் 
கண்களில் !!
***************************************************



Thursday, January 15, 2026

சிவசக்தி காதல்

ஒரு
முட்டாள் கவிஞன்
பாடினானாமே?
நான்
மனிதனாய் பிறந்து
காதலித்து
வேதனையில்
வாட வேண்டுமென்று!!
மடையன் ...
காதலுக்கு
உவமையே
நாமென்று
அறியான் 
போலும்!!
**************************************
உன்
மனதிலாடும் 
சித்தன்
நான்!!
ஏனோ
என்னை
மயானத்திலாடும் 
பித்தன்
என்கிறார்கள்!!
*****************************************
நீ 
தடுக்கவே 
வேண்டாம் ...
இதயத்தில்
இருக்கும்
சக்தியை தாண்ட
ஆலகாலத்திற்கு
சக்தி இருக்கறதா 
என்ன!?
****************************************
மும்மொழி
திட்டம்
இதுதானோ!!?
நீ
பேசும் மொழி..
உனது
கண்களின் மொழி..
உனது
மௌன மொழி!!
******************************************
கண்களாலேயே 
என்
இதயம் முழுதும்
அள்ளிப்போகிறாய் ...
இதயமற்றவனென
பரிகசிக்கிறார்கள்
அடியார்கள்!!
******************************************
நான்
இடப்பாகத்தை
உனக்கு
தந்ததாக
கதை கட்டுகிறார்கள் ...
எனது
எல்லா பாகமும்
நீயே ஆக...
எப்பாகத்தை
தருவது
நான்!?
*****************************************
மனக்கிளையில்
நீ
சாய்ந்த
இடங்களிலெல்லாம்
துளிர்
விட்டிருக்கிறது ...
உன்
நினைவுகள்!!
********************************************
உலகிற்கு
ஒளி கொடுப்பது
நானே
என்கிறார்கள் ...
எனக்கல்லவா
தெரியும்
மின்சாரமாய் 
நீ
இருக்கிறாய்
என்று!!
**********************************************
உயிர் 
கண்களுக்கு
தெரியாதாமே !!
நீ
எப்படி
தெரிகிறாய்
என்
கண்களுக்கு!?
***********************************************
வெறும் 
வார்த்தை கட்டுகளாய் 
நான் கிறுக்கியது 
கவிதை 
ஆகி விட்டது..
நீ படித்த போது!!
************************************************
தென்றல் 
சுமந்து வருகிறது
உன் வாசமும் சுவாசமும் ...

வாசத்தை 
திருடுகிறது 
ரோஜாக்கூட்டம் ...

சுவாசத்தை
திருடுகிறேன்
நான் ...!!
*****************************************************