Sunday, July 3, 2022

மீண்டும் ஒரு முறை

கண்ட காட்சிகள் எல்லாம் 
கண்முன் மீண்டும் விரியுமோ !
கண்டதில் நிஜமெது நிழலெது 
மனமது உண்மை உணருமோ !

தோளில் புத்தகம் சுமந்து 
சிலிர்க்கும் மழையில் நனைவேனோ !
தோளோடு தோளாய் வரும் 
தோழனின் சேட்டையில் சிரிப்பேனோ !

கந்தலான கால் சட்டையணிந்த 
தோழனுக்கு நகைப்பூட்டி மகிழ்வேனோ 
கசங்கிய தாவணி தோழியின் 
சிறு முறைப்பை நகைப்பாய் கடப்பேனோ !

அன்பாய் அதட்டும் ஆசிரியரை 
பள்ளியறையில் காண்பேனோ !
கசப்பான அறிவுரைகள் இன்று 
தேனாய் இனிப்பதை சொல்வேனோ !

ஆல காலனின் நந்தவனத்தில் 
அந்தி சாயும் வேளையில் சேர்வேனோ !
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி 
மனமகிழ்ந்து மெய் தளர்வேனோ !

இளவேனில் வீசும்  சித்திரையில் 
வயல் வரப்பில் பாடி நடப்பேனோ !
இளங்காற்றில் தள்ளாடும் 
கதிர் கண்டு நானும் ரசிப்பேனோ !

வயலறுத்து சிறு கட்டு தான் சுமந்து 
கை வலிக்க களம் கொண்டு சேர்ப்பேனோ !
போரடிக்கும் காளையின் பின்னே 
கால் வலிக்க நடந்து களைப்பேனோ !

துள்ளி விளையாடும் கன்றுடன் 
துள்ளி நானும் களித்திடுவேனோ !
எள்ளி நகையாடும் பெரிசுகளின் 
கள்ளமில்லா உள்ளத்தில் கரைவேனோ !

பயமறியா சிறு பாலகனாய் 
ஊர்குளத்தில் நீராடி களிப்பேனோ !
திசையறியா சிறு குருவியாய் 
ஊர் சுற்றி பொழுதை தொலைப்பேனோ !

புதுத்துணியும்தான் வாங்கி 
தையல் கடையில் காத்திருப்பேனோ !
வெடிக்காத வெடிகளை சேர்த்து 
நெருப்போடு விளையாடி களிப்பேனோ !

கார்த்திகையில் எரியும் 
சொக்கப்பனையின் ஒளியில் உறைவேனோ!
காவிலும் கோவில் விழாவிலும் 
சொக்கும் நாடகத்தில் கரைவேனோ  !

நிஜமாய் நின்றவர்களை 
நிழலெனவாவது காண்பேனோ !
அவர்கள் அன்பிற்கு விலையாய் 
எதைத்தான் நானும் கொடுப்பேனோ !

நடந்த வழியில் மீண்டும் 
ஒரு முறை நடந்திடுவேனோ !
இரு விழியில் கண்டதை மீண்டும் 
ஒரு முறை காண்பேனோ  !




No comments:

Post a Comment