Tuesday, November 30, 2021

காமு காபி

தேவன் பிறந்தான்
கிமு கிபி என பிரிந்தது
உலக வரலாறு
நீ பிறந்தாய்
காமு (காதலுக்கு முன்)
காபி (காதலுக்கு பின்)
என பிரிந்தது
என் வாழ்க்கை வரலாறு!

Tuesday, November 23, 2021

என்னிலே இருந்த

என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காணவல்லரோ?
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே.

நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே 

சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா 

நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில் 

சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ


கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?

கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!

கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே!

ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.


கரை சேர்க்க ஒருவன் 

கட்டாயம் வருவான் !

கண்மூடி பார்த்தால் 

கண்ணுக்குள் தெரிவான் !

Sunday, November 21, 2021

அருள்வாய் சிவனே !

 கண்டத்தில் விடம் கொண்ட சிவனே ...

நெஞ்சத்து விடம் நீக்கி 

அருள்வாய் சிவனே !


மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்
நண்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
எண் கலந்து நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே!


ஊற்றை சடலமடா 

உப்பிருந்த பாண்டமடா 

மாற்றி பிறக்க 

மருந்தொன்று உரைப்பாயோ 

மாற்றி பிறக்க 

மருந்தொன்று கிட்டுமாயின் 

ஊற்றை சடலம் விட்டே 

உன்னடி சேரேனோ !!


மாமன் மகளோ 

மச்சினியோ நானறியேன் 

காமன் கணையெனக்கு 

கனலாக வேகுதடி 

மாமன் மகளாகி 

மச்சினியும் நீயானால் 

காமன் கணைகளெல்லாம் 

கண் பார்த்தால் வேகாதோ !!


பற்றற்ற நீரினிலே  

பாசி படர்ந்தது போல் 

உற்றுற்று பார்த்தாலும் 

உன் மயக்கம் தீருதில்லை 

உற்றுற்று பார்த்தாலும் 

உன் மயக்கம் தீர்ந்தாலும் 

பற்றற்ற நீராகும் 

பாசியும் வேறாகுமோ !!


சாய சரக்கெடுத்தே 

சாதிலிங்கம் தான் சேர்த்து 

மாயப்பொடி கலந்து 

வாலுழுவை நெய்யூற்றி 

பொட்டென்று இட்டு விட்டாள் 

புருவத்திடை இட்ட மருந்தால் 

இப்பருவம்  ஆனேனோ !!


புல்லரிடத்தே போய் 

பொருள் தனக்கு கையேந்தி 

பல்லை மிக காட்டி 

பரக்க விழிக்கிறேண்டி 

புல்லரிடம் போகாமல் 

பல்லை மிக காட்டாமல் 

பரக்க விழிக்காமல் 

பொருளெனக்கு தாராயோ !!


 உன்மீது 

காமக் கணை எறிந்த 

மன்மதனை எரித்திட்டாய் ...

கயவர்களிடம் குடி கொண்டு 

குழந்தைகளையும் எரிக்கும் 

காமனை ஏன் விட்டு வைக்கிறாய் 

சுயநல சிவனே !

உன் நெற்றிக்கண்ணின் 

அனலும் வெந்ததோ !

ஜடமாய் ஆனாயோ !

யாவரும் உன் 

குழந்தைகளன்றோ !

நெற்றிக்கண் 

திறக்காயோ சிவனே!

Saturday, November 20, 2021

நெஞ்சணைய நீ இருந்தால்

 வான் தொடும் மலைகள்

மலை தழுவும் முகில்கள்

கவிதை மழை பொழியும் 

களிப்பினை மெல்ல தூவும் !


நடை பழகும் நதிமகள்

இடை நெளியும் புதுமகள் 

பறக்கும் பறவை கூட்டம் 

கற்பனைக்கு சிறகு தரும் !


குடை பிடிக்கும் ஒருமரம்

பாய் விரிக்கும் புல்வெளி

நெஞ்சணைய நீ இருந்தால் 

பஞ்சணை தோற்றுப் போகும் !

Tuesday, November 16, 2021

நான் இப்படித்தான் !!

 வர மாட்டாய் என்று 

தெரிந்தும் அழைப்பேன் ...

தர மாட்டாய் என்று 

தெரிந்தும் கேட்பேன் ...

கேட்க மாட்டாய் என்று 

தெரிந்தும் சொல்வேன் ...

நீ எப்படியோ ...

நான் இப்படித்தான் !!


இதுதான் 

கடைசி ஜென்மம் என்று 

நினைத்தேன் ...

உன் கனவுகளோடு வாழவே 

ஜென்மங்கள் 

போதாது போலிருக்கிறதே !


உன் 

கண்ணாடி வளையலும் 

கால் கொலுசும் 

ஓர விழி பார்வையும் 

குறு நகையும் 

காப்பி ரைட் 

கேட்கும் போலிருக்கிறதே 

என் கவிதை 

கிறுக்கல்களுக்கும் !!

Saturday, November 13, 2021

கூடும் மேகங்கள்

 கூடும் மேகங்கள் 

கூட்டுது உன் ஞாபகம் ...


உடல் உருகி 

ஊன் உருகி 

மடிந்தது காதல் ...

எப்போது' அள்ளிப்போவாய் 

எஞ்சியுள்ள எலும்புகளை ...

காதல் வீதியில் 

கடை விரிக்க !!

மழை

குழந்தையின் 
காகித கப்பல்
அழகாகத்தான் இருக்கிறது ...
எனது 
காகித கிறுக்கல்களை விட!

குடைக்குள்
பருவ மழை

காதல் காய்ச்சல் ...
உன்
பார்வை மழையில்
நனைந்த எனக்கு!

நிலா என்னும்
நெற்றி சுட்டி அணிந்து
நட்சத்திர பூக்கள் சூடி
எந்த காதலனுக்காக
தன்னை 
அலங்கரித்து கொள்கிறது
வானம்!?

பிரம்மனின் ஓவியம்
வருணனின் மழையில்
காமனின பாணம்
அக்னியாய் நெஞ்சில்


காத்திருக்கும்போதெல்லாம் 
கண்ணீர்விட வைக்கிறாய் ...
எதிர்பாரா வேளையில் 
இன்ப சாரலில் நனைக்கிறாய் ...
அமைதியாய் இருந்தால் 
விழி மின்னலில் எரிக்கிறாய் ...
பாராமல் போனாலோ 
வார்த்தையில் இடியாய் வெடிக்கிறாய் ..
இனித்தாலும் 
எரித்தாலும் 
நீ வந்தால்தானே 
பூக்குது 
என் காதல் வனம் !!