மலை முகட்டில்
பிறந்து
அன்னையின்
காலடி காண
அடிவாரம்
தேடி வந்தாயோ !
ஆளில்லா
காட்டில்
எதற்கு இந்த
கானக கச்சேரி !
எங்கே
கற்றுக்கொண்டாய் ...
கூழாங்கல்லை
பட்டை தீட்டும்
வித்தையை !
பொன்னி
நீ ஆனதாலோ
உன் கரையில்
பொன்னிற மணல்கள் !
நீ
மட்டும் இல்லையென்றால்
சருகை
குவித்துவிடுவான்
கனல் கக்கும்
சூரியன் !
பூமிப்பெண்ணுக்கு
நரம்பாய்
நீ ஓடுவதாலோ
தினம் சிரிக்கிறாள்
புது பெண்ணாய்!
ஊரோடு
நீ(ர்) ஓடினால்
ஏரோடு சிறக்கும்
வயல் ...
சேறோடு சிரிக்கும்
நாத்து ...
தாரோடு சிறக்கும்
வாழை !
ஒவ்வொரு
மாநிலமும் சொல்கிறது
நீ
தங்களுக்கென்று ...
நீயேன் ஓடுகிறாய்
கடலில்
சங்கமிக்க !
ஓடும் வரைதான்
நீ பரிசுத்தம் ...
நின்று விட்டால்
நீயும் சாக்கடையே !
கண்விரித்து பார்த்தேன்
கா...விரியை ....
கவித்துளிகள் விரிந்தன
இதய வானில் !
கானம் பாடி
தொண்டை வற்றி
குயிலொன்று வருகிறது
தாகம் தீர்க்க !
அதன் தாகத்தோடு
தீர்த்துவிட்டு போ
எனது
கவிதை தாகத்தையும் !
No comments:
Post a Comment