Thursday, January 14, 2021

தெய்வம்

 ஓட்டை உடைசல் பேருந்தில்  

சொகுசு பேருந்து என்று 

எழுதியிருக்கிறார்களே என்று

அரசாங்கத்தை 

திட்டி கொண்டிருந்தேன் ...


நீ ஏறும் வரை !!


=====================


கருவறைக்குள்ளேதானே 

தெய்வத்தை காண்பார்கள் ....


கருவறையிலிருந்து 

வெளியே வந்தபின் 

கண்டேன் !!!


=======================


சொர்க்கம் 

பிரகாசமாக இருக்கும் 

என்று யார் சொன்னது ?


இருளாகவும் இருக்கும் ...


சொர்க்கத்தில் 

இருந்தேனே பத்து திங்கள் !!


=======================


நிலா எவ்வளவு அழகு பார்த்தாயா 

என்று சொல்லி சோறூட்டினாய் ...

நிலா என்று என்னைத்தானே 

சொன்னாய் .....

வானில் தெரிந்த அந்த 

முட்டை பந்திடம் ...!!


=========================


தவறுகளை கண்டு 

ஆனந்தம் கொள்ள 

உன்னால் மட்டுமே 

முடியும் ....

தளிர் நடை பயின்றபோதும் 

மழலை லொழியில் உளறிய போதும் 

ரசித்தவள் நீயல்லவா !!!


===========================


நீ மறந்து விடுவாய் ..

எனினும் ...

அடுத்த பிறவியில் 

நான் தாயாகவும் 

நீ சேயாகவும் 

பிறந்தால் ...

அப்போதாவது தீர்க்க 

முடியுமா ....

பெற்ற கடனையும் 

வளர்த்த கடனையும் ..!!


======================


காலம் உன்னை 

கவர்ந்து சென்ற பின்பு 

நான் கோவிலுக்கு 

செல்வதில்லை ....

கோவிலிலுள்ள கற்சிலை 

திடீரென்று பேச ஆரம்பித்து 

தெய்வம் எங்கே என்று 

கேட்டுவிட்டால் 

நான் யாரை காட்டுவது !


========================


காதல் என்று ஏமாந்து 

ஆயிரம் கவிதை 

கிறுக்கிய பின்தான் புரிந்தது ..

வாழ்வில் நான் உச்சரித்த 

முதல் வார்த்தையே 

கவிதைதான் என்று !


=================


விறகு அடுப்பில்  

தினம் எனக்காய் காய்ந்தவள் 

விறகு அடுக்கில் எரிய கண்டேன் .. 


உயிரணுவில் 

இவ்வுலகில் என்னை ஈன்றவளை   

ஓர் அணுவேனும் மீண்டும் 

எவ்வுலகில் காண்பேன் 


===========================


உன் உயிரணுவால் 

உலகத்தை காட்டினாய் ...

ஓர் அணுவேனும் 

நான் முகம் வாடாது வளர்த்தாய் ...


நீயும் என்னை 

ஏமாற்றியிருக்கிறாய் ...

விவரம் தெரியாத வயதில் 

கோவிலுக்கு அழைத்து சென்று 

இதுதான் தெய்வம் என்று 

கற்சிலையை காட்டி விட்டாய் ...

இப்போது புரிகிறது ...

தெய்வம் தன்னை 

தெய்வம் என்று 

சொல்லி கொள்வதில்லை !


======================






 





நித்திரை

நித்திரையிலும் 
மனத்திரையில் 
உன் சித்திரம் 



இன்பத்து பாலும் நீயன்றோ

 கருவிழி மையூற்றி 

இதழ் வரியால் 

இதய ஏட்டில் 

எழுதுகிறாய் கவிதை தினம் !


மன மொழி மெய்யால் 

கொஞ்சி அமுதிடவே 

வாராமல் போனாலோ 

நானோர் நடை பிணம் !


உன் கனவே  அறம் 

உன் நினைவே பொருள் 

இன்பத்து பாலும் நீயன்றோ !


காதலெனும் அறத்தில் 

வாழ்வின் பொருள் காண  

பூவுலகின் இன்பமே வாராயோ !

Tuesday, January 12, 2021

பொங்கலோ பொங்கல்

கரும்பு காட்டு பக்கம் வாடி 
கட்டுக் கரும்பு நான் தாறேன் 
சுள்ளி கட்டு நீ சுமந்தா 
பற்றி எரியுமென் நெஞ்சமடி 

கல்லு கூட்டி அடுப்பு மூட்ட 
மெல்ல நானும் வாறேண்டி 
பானைக்கு மஞ்சள் கட்டிப்புட்ட 
கழுத்துக்கு மாமன் தாறேண்டி 

சாந்து பொட்டு வடிவழகி 
சேந்து சமைப்போம் பொங்கலடி 
பொங்கல் கொழஞ்சு போச்சுதுன்னா 
மாமனுக்கு பொங்கல் சோறே நீதாண்டி 




Thursday, January 7, 2021

நிழல் யுத்தம்

பொறாமையில் ஆடுகிறது 

உன் காது கம்மல் ...

உன் மார்பில் தவழும் 

தங்க சங்கிலியை 

பார்த்து !


நான் 

காதலை விதைக்க 

வரும்போதெல்லாம் 

உனது மனம் 

தரிசாகி விடுகிறதே !


நீ 

ஐம்பது கிலோ 

தாஜ்மகாலாம் ...

என் காதலுக்கு 

உன் இதயத்தில் 

சமாதி கட்டியிருப்பதாலா !!


நான்தான் 

யுத்தம் இன்றியே   

உன்னிடம் 

தோற்று விட்டேனே !

பிறகு ஏன் 

நினைவுகளை அனுப்பி 

என்னோடு 

நிழல் யுத்தம் 

செய்கிறாய் !

வண்ணத்து பூச்சி

 வாய் பொத்தி நிற்கிறது 

ஏழு ஸ்வர மெட்டு 

எட்டாம் ஸ்வரமாய் 

உன் கொஞ்சும் மொழி கேட்டு !


அறுசுவை மட்டுமே உண்டென 

எண்ணியிருந்தேன் ...

ஏழாம் சுவையாய் 

உனது சமையலை 

சாப்பிடும் வரை !


கடிவாளமில்லாமல் 

அங்குமிங்கும் அலைகிறது 

எனது கற்பனை குதிரை ...

நீ சவாரி செய்வதால் !


நீ மஞ்சள் பூசி குளிக்கும்போதுதான் 

மஞ்சள் தூளுக்கே 

நடக்கிறது ...

மஞ்சள் நீராட்டு விழா !


தமிழுக்கே சொற்பஞ்சமா ...

நீ போட்டு தந்த பானத்திற்கு 

தேன்நீர் என்பதை விட 

உயர்வான சொல் 

கிடைக்க மாட்டேனென்கிறதே !


உன் நினைவுகளை 

சேமிக்கும்போது மட்டும் 

அன்லிமிடெட் ஸ்பேஸ் அவெய்லபிள் 

என்று காட்டுகிறது 

எனது மனது !


 வண்ணத்து பூச்சியொன்று 

தோட்டத்தில் 

நடை பழகி கொண்டிருந்தது 

உன்னை போல் 

ஆக வேண்டுமாம் !


Friday, January 1, 2021

கோலம்

புள்ளிகளை சேத்து வச்சு
கோலம் போட்டு ரசிப்பவளே 
எந்தன் வீட்டு வாசலிலும் 
உந்தன் கோலம் வருமோடி 
வெட்டி போட்ட விரல் நகமும் 
பிறை நிலவா தெரியுதடி 
பொட்டு வச்ச தங்க முகம்  
பௌர்ணமியா ஜொலிக்குதடி 
அழகு மதி உன்னை கண்டு  
அர்ச்சகர் குழம்பி போனாரடி 
பௌர்ணமி திதி இன்னைக்குன்னு 
பூஜையும்தான் ஆலயத்தில் நடக்குதடி