Thursday, March 17, 2022

மண்தான் ஜெயித்துக்கொண்டே

மலர்களை கொய்வதே 

செடியின் மீது காட்டும் 

வன்முறை 

எனும்போது  

உயிர்களை கொய்து 

எதனை  

அடையப் போகிறீர்கள் !


பொம்மைகளை 

ஏந்த வேண்டிய 

கரங்களுக்கு  

குண்டுகளை

அறிமுகம் செய்து 

ஆவதென்ன ! 


கணித சூத்திரங்களை 

கற்று தந்த 

வகுப்பறை 

மனித வக்கிரங்களை 

கற்று தரவில்லையே !


குருவிகளையும் 

ஆடுகளையும் 

துரத்தி  

மகிழ்ந்திருந்த எங்களை 

பீரங்கிகளால் 

துரத்துகிறீர்களே ...

உங்களை மரணம் 

துரத்தும்போது 

என்ன செய்வீர்கள் ! 


பீரங்கிகளின் 

கண்சிமிட்டலில் 

புல்லின் பனித்துளிகள் 

உருகிப்போயின !


கவலையின்றி 

நாங்கள் 

சைக்கிளில் திரிந்த  

தெருக்கள் 

எரிந்து 

கொண்டிருக்கின்றன 

எங்கள்

மனங்களைப்போலவே!


எங்கள் 

வயிற்றில் அடித்துவிட்டு 

வென்று விட்டதாய் 

மாரில் அடித்து கொள்கிறீர்களே ...

உலகத்தை வென்றதாய் 

கொக்கரித்து 

மாண்டு போனவர்களின்  

சாம்பலையாவது  

காட்ட முடியுமா 

உங்களால் !


மண்ணும் 

மலையும் 

நதியும் 

காற்றும் 

வெல்ல வேண்டியவை அல்ல 

மானுடத்தின் 

கவசங்கள் என்பதை 

எப்போது உணர்வீர்கள் !


எரிவது 

உயிரற்ற கட்டிடங்கள் அல்ல 

எங்கள் 

எதிர்காலமும் 

உங்கள் 

புண்ணியங்களும் !

மிச்சமிருக்கும் 

எச்சங்கள் சொல்லும் 

உங்கள் 

பாவக்கணக்கை !


ஜென்மங்கள் எடுத்தாலும் 

மண்ணை 

உங்களால் ஜெயிக்க இயலாது 

மண்தான் ஜெயித்துக்கொண்டே 

இருக்கும் !

 


No comments:

Post a Comment