Saturday, March 26, 2022

கனவில் மேயும் கவிதைகள்

 இறைவனின் தூரிகையில் 

ஆயிரம் கோடி வண்ணங்கள் 

இன்பத்தில் ஆழ்த்தும் 

ஆயிரம் கோடி எண்ணங்கள் 


உலகம் முழுதும் 

அவனது சித்திர கூடம் 

அழியாத கோலங்களை 

அவன் தூரிகை காட்டும் 

 

==============================


ஒத்தையிலே நடந்து போற சிங்கார மயிலே 

ஒத்த வார்த்தை சொல்லிப்போ செவ்விதழாலே 

ஆடு மேய்ச்சு பொடி நடையும் நீ  நடக்கயிலே 

நெஞ்சுக்குள்ள குளிருதடி பட்டப்பகலிலே '


தூரப்பார்வையில் வேக வைக்குது சித்திரை வெயிலே 

ஓரப்பார்வையில் சுழன்றடிக்குது ஐப்பசி புயலே 

ஆட்டு மந்தை ஓட்டிப்போற மந்தார குயிலே  

ஒன்ன தவிர வேறெதுவும் உறைக்காது நெஞ்சிலே 


==================================


புதுசா பூவொண்ணு நெஞ்சுக்குள்ளே ஆடுதடி 

புது ஸ்வரத்தில் பாட்டொண்ணு பாடுதடி  

ஆச ஒன்னு மனசுக்குள்ள ஓடுதடி 

நாடி நரம்பெல்லாம் ஒன்னயே தேடுதடி


கொலுசு சத்தத்துல உசிரும்தான் உருகுதடி 

தின்னுஞ்சோறு தொண்டக்குழியில நிக்குதடி

சூடு வச்ச மீட்டரா இதயம் துடிக்குதடி

ஆடு ஒண்ணு கேலியாத்தான் பாக்குதடி


மலையோரம் அந்தி வெயில் சாயுதடி

மனசோரம் மோகமும்தான் பாயுதடி

கோரப்புல்ல ஆடும்தான் மேயுதடி 

நெஞ்சப்புல்ல ஒந்நெனப்பு மேயுதடி


நினைவுகளில் நீந்தி வரும் நீச்சல்காரி

கனவுகளை மேய்த்து வரும் மேய்ச்சல்காரி

கவிதை பக்கங்களை நிரப்பும் கவிதைக்காரி

உம்மென்றால் ஜென்மத்துக்கும் வீட்டுக்காரி

============================


கூட்டு வண்டி சாலையில தட தடக்குது 

குளிர் காத்துல உசிருந்தான் வெட வெடக்குது 

மின்னலோடு வானமுந்தான் இடி இடிக்குது

பின்னலோடு உனது வெட்கமுந்தான்  துடி துடிக்குது


தூரத்தில் மலை முகட்டில் அந்தி சாயும் வேளை 

பக்கத்தில் தோளோடு தோள் சாயும் சோலை

கூந்தலில் சூடிய சாமந்தியும்  மயக்குது ஆளை

வாசம் கண்டு கால்கள் பின்ன தடுமாறுது காளை


கன்னத்துல கன்னத்த சேக்குறியே 

எண்ணங்கள கலவரமா ஆக்குறியே 

இளநீர இதழிலதான் காட்டுறியே

பதநீர பார்வையால ஊட்டுறியே


தாகம் கொண்டு பூமியுந்தான் தவிச்சு நிக்குது

வேகம் கொண்டு வாடையுந்தான் வீசி அடிக்குது

மேகம் ஒண்ணு மழைத்துளிய கொட்டப் பாக்குது 

மோகம் கொண்டு தேகமுந்தான் மெல்ல வேர்க்குது 


காள மனச காளைகளும் புரிஞ்சு ஓடணும்

காதலப்போல வண்டியுந்தான் வேகம் எடுக்கணும்

வெளக்கேத்தும் முன்னே நாம ஊரு சேரணும் 

வெளக்கேத்தி காலமெல்லாம் சேந்து வாழணும் 


====================================


கண்ணால காதல் மொழி பேசுறியே 

சொல்லால அரிவாள வீசுறியே 


புல்லுக்கட்ட தலையிலதான் சுமக்குறியே 

மல்லுக்கட்டி எம்மனச பொளக்குறியே 


தூண்டா வெளக்கா மனசுல எரியுறியே 

வேண்டாத சாமியில்ல விலகித்தான் ஓடுறியே 


சேத்து வயலா மனசைத்தான் கலக்குறியே 

மௌன மொழி பேசி காதல வளக்குறியே 


பாசமெல்லாம் பாத்தி கட்டி சேத்து வச்சிருக்கேன் 

நேசமெல்லாம் கூடும் நேரம் பாத்து காத்திருக்கேன் !


முன் ஜென்மம் நான் செஞ்ச புண்ணியமடி 

ஏழு ஜென்மமும் நீ இருந்தா சொர்க்கமடி 


========================================







No comments:

Post a Comment