Wednesday, May 25, 2022

மழையை கண்ட

மழையை கண்ட 

மயிலாகி விடுகிறது 

உன்னை கண்ட

மனது !


ஒரு குறுஞ்செய்தியிலாவது

சொல்லிவிடு

என்னை மறக்க 

என்ன செய்தாயென்று...

நானும் முயற்சிக்கிறேன் 

உன்னை மறக்க


யோகா செய்ய சொல்கிறார் 

டாக்டர்...

மறுத்து விட்டேன்...

என் இதயத்தில் இருக்கும் 

நீ 

தத்தளிப்பாயே 

மூச்சுக்காற்று இல்லாமல் 


காதலுக்கு 

ஜாதி மதம்

இல்லையாமே ...

எரிக்கவா புதைக்கவா 

என்ற குழப்பத்தில்

இதயத்தில்

உறைந்தே விட்டது

செத்துப்போன 

உன் காதல் 


கண் சிமிட்டாமல்

உன்னை கண்ட கண்கள்

ஏங்குகின்றன 

கண் சிமிட்டும் 

நேரமாவது

நீ தென்பட மாட்டாயா 

என்று 


நீ

சிறுபொறிதான் ..

எரித்தே விட்டாய் 

என் 

இளமையை 


இடைவிடாது 

உன் உடையோடு 

கதைக்கிறது காற்று ...

இடைவிடாது 

இம்சிக்கிறது 

உன் இடை  


காலம் 

குறைந்து கொண்டே 

செல்கிறது ...

உன் மீது கொண்ட 

காதல் மட்டும் 

கூடிக்கொண்டிருக்கிறது !


எதுவும் நிரந்தரமில்லை 

என்பது 

உன் காதலுக்கு 

பொருந்தி விட்டது ...

ஆனால் 

உன் நினைவுகளுக்கு 

பொருந்தாது போலும் !


உன்னை 

மறக்க முயன்று 

மறந்து விட்டேன் ...

என்னை !


தமிழகத்துக்கு 

விடியலை தர 

பலர் போட்டி ....

என் காதலுக்கு 

விடியலை 

யார் தருவார் 

உன்னையன்றி !


யாராவது 

நம்மை எப்போதும் 

நினைத்துக்கொண்டிருந்தால் 

நமக்கும் 

அவர் நினைவு 

அடிக்கடி வருமாம் ...

உனக்கு 

அடிக்கடி வருகிறதா 

என் நினைவு !?



அதி நவீன காராம் ..

இருக்கும் 

இடத்தில் இருந்தே 

இயக்கலாமாம் ...

இதென்ன பிரமாதம் ...

எங்கோ இருந்து 

என்னை 

இயக்கி கொண்டிருக்கிறாயே 

நீ !


மழையாய் 

நீ 

வந்து போய் விட்டாய் ..

இன்னமும் 

சொட்டி கொண்டிருக்கிறது 

உன் வாசம் !

No comments:

Post a Comment