Wednesday, May 4, 2022

உன் நினைவுகள்

புரண்டு படுக்கும் 

பக்கமெல்லாம் 

தானும் புரண்டு 

என் தூக்கத்தினை 

கெடுத்து விடுகின்றன 

உன் நினைவுகள் !


முதல் போரிலேயே 

என் இதயத்தை 

வென்ற பின்னும் 

மீண்டும் மீண்டும் 

ஏன் படையெடுக்கின்றன 

உன் நினைவுகள் !


என் விரல் பிடித்தே 

குழந்தையாய் 

தொடர்கிறது 

உன் நினைவுகள் !


கவிதை மேகங்களை 

உருவாக்கி 

அனுப்பிக்கொண்டே இருக்கின்றன 

கடலாய்

உன் நினைவுகள் !


அல்பாயுசில் 

போய் விட்டது 

உன் காதல் ...

சாகா வரம் பெற்று 

பாடாய் படுத்துகிறது 

உன் நினைவுகள் !


கவிதை பக்கங்கள் 

என்று நினைத்திருந்தேன் ...

கண்ணீர் பக்கங்களாக்கி 

விட்டனவே 

உன் நினைவுகள் !


ஒவ்வொரு வினாடியும் 

நினைத்து நினைத்து 

தாராளமாய் 

செலவழித்தும் 

தீரவில்லை 

உன் நினைவுகள் !


தென்றலும் 

வியர்க்க வைக்கும் 

என்று 

புரிய வைத்தது 

உன் நினைவுகள் !


கலர் படமாய் 

இருந்த வாழ்க்கையை 

கருப்பு வெள்ளை 

படமாய் மாற்றி விட்டன 

உன் நினைவுகள் !


தேதி கிழிக்கும் போதெல்லாம் 

தினம் தினம் 

ஒரே ராசி பலனை 

சொல்கிறது 

நாட்காட்டி ...

உன் நினைவுகள் !


எக்ஸ்பயரி தேதி

போடாமலே

இதயத்தில் உருவாகி

நிறைகின்றன

உன் நினைவுகள் !


நீ

எனக்காக பிறக்கவில்லை

எனில்

எனக்காக 

ஏன் பிறந்தன

உன் நினைவுகள்!


வானவில்லாய் 

நீ வந்து போய் விட்டாய் 

வண்ணங்களாய் 

மனதில் நிறைந்திருக்கிறது 

உன் நினைவுகள் !


அருகில் 

இருந்த நீ 

தொலைவில் போனபோது ...

தொலைவில் இருந்து 

அருகில் வந்தன 

உன் நினைவுகள் !


அன்று 

தூங்க விடாமல் 

செய்தது 

உன் அருகாமை ...

இன்றும் 

தூங்க விடாமல் 

செய்கிறது 

உன் நினைவுகள் !


நீ 

இருந்தபோது 

பூக்களமாகவும் 

நீ 

இல்லாதபோது 

ரணகளமாகவும் 

இருக்கின்றன 

உன் நினைவுகள் !


நாட்குறிப்பில் 

வேறெதை 

எழுதுவது ...

இதயகுறிப்பில் 

நிறைந்திருக்கிறதே 

உன் நினைவுகள் !


நிச்சயம் 

இன்று தூங்கிவிடுவேன் 

என்று சபதம் எடுக்கிறேன் 

ஒவ்வொரு நாளும் ...

காலையில் 

நனைந்து போன 

தலையணையை காட்டி 

பரிகசிக்கிறது 

உன் நினைவுகள் !


தூங்குவதற்காக 

இரவுகளை படைத்ததாக 

பொய் சொல்கின்றன 

வேதங்கள் ...

அது உண்மையானால் 

இரவுகளோடு 

இறைவன் எதற்காக 

படைத்தான் 

உன் நினைவுகளை !?


முள்ளும் மலரும் 

தனித்தனியாகத்தானே 

இருக்கும் ....

இதயத்தில் இரண்டும் 

சேர்ந்தே இருக்கின்றன ..

உன் நினைவுகள் !


மேகமாய் 

நீ கடந்து போய் விட்டாய் ...

இன்னமும் 

மழையாய் 

கொட்டிக்கொண்டிருக்கிறதே 

உன் நினைவுகள் !


சிறுவயதில் 

தும்பியை பிடித்து 

நூலில் கட்டி 

விளையாடியபோது 

தெரியவில்லை ...

பின்பொருநாள் 

என்னை கட்டி 

விளையாட காத்திருக்கிறது 

உன் நினைவுகளென்று !


தயவு செய்து 

என்னை 

புதைத்த இடத்தில் 

செடிகளை நட்டு விடாதீர்கள் ...

மலர்களுக்கு பதில் 

செடிகளில் பூக்கக்கூடும் 

அவள் நினைவுகள் ...

அவள் நினைவுகளுக்குத்தான் 

மரணமில்லையே !! 

No comments:

Post a Comment