Saturday, April 2, 2022

உறவுக்கு வண்ணம் பூசி

 கருவிழி தூரிகையால் 

மோக வண்ணங்களை 

தீட்டுகிறாய் நெஞ்சில் ...

உறவுக்கு வண்ணம் பூசி 

வருவாயோ வாழ்வில் !


காணும் யாவும் 

உன் வண்ணங்களை காட்டி 

பற்ற வைக்கிறது 

உன் நினைவு தீயை ...

அதன் 

சாம்பலிலாவது 

கரையுமோ உன் எண்ணங்கள !


வண்ணங்களால் 

நிறைந்த உன் காதல் 

கருப்பு வெள்ளை விழியில் 

வழிய வைத்தது 

நிறமற்ற நீரை !


கொஞ்சிய வண்ணம் 

நீ சொன்ன வார்த்தைகளில்  

சாயம் போய் விட்டது ...

இன்னமும் வண்ணங்களை 

காட்டி மாயம் செய்கிறது 

உன் எண்ணங்கள் !


என் 

கருப்பு இரவுகள் 

ஒவ்வொன்றும் 

வானவில் இரவுகளாகவே 

கழிகின்றன 

வண்ண மயமான 

உன் கனவுகளால் !


நினைத்தபோது 

வண்ணங்களை 

மாற்றிக்கொள்ளுகிறாய் 

உன் எண்ணங்களில் ....

உன் வண்ணங்களை தவிர 

வேறெதையும் அறியாது 

தவிக்கிறது 

என் எண்ணங்கள் !


உன் எண்ணங்கள் 

ஒவ்வொன்றும் 

நெஞ்சில் 

பூக்க வைக்கிறது 

பூக்களை 

பல வண்ணங்களில் ...

பூச்சூட வருவாயோ ...

வேர்களில் 

வெந்நீர் ஊற்றி போவாயோ !


கருமையே அழகு ...

உன் 

கருவண்ண கூந்தலில் 

இடம் கிடைத்ததால் 

வண்ண பூக்களும் !


பொய் வண்ணம் 

பூசி வந்த 

உன் காதலுக்கு முன்னால் 

தோற்றுப்போனது 

நிற பேதமற்ற 

என் காதல் !


ஓவியம் ஒன்று 

காதல் ஓவியத்தை 

தீட்டியது நெஞ்சில் ...

தீட்டி முடிந்ததும் 

கலைந்து போனது 

வார்த்தை புயல் 

ஒன்றில் !


உன் அழகு வண்ணங்களை 

வெண்மை கொண்ட காகிதத்தில் 

வடிக்க முனைகிறது 

கரு மை கொண்ட 

பேனா !

  




No comments:

Post a Comment