Saturday, April 2, 2022

புன்னகை பூ

 உனக்கான கவிதையை 

எழுத முயற்சித்து ...

தொடங்கிய இடத்திலேயே நிற்கிறோம் ... 

இமை கொட்ட முடியாமல் நானும் ...

மை கொட்ட முடியாமல் என் பேனாவும் ...

உன் அழகில் மெய்மறந்து !


விடு கதை என்ற பெயரில் 

நீ 

விடும் கதைகள் கூட 

சுவாரஸ்யமாகத்தான் 

இருக்கிறது ...

என் 

கனவு புத்தகத்தில் !


மனதை இரும்பாக்கி கொண்டேன் 

உன் 

கண்ணில் இருப்பது 

காந்தம் என்றறியாமல் !


பார்வை என்னும் 

உளிகொண்டு 

காதல் என்னும் சிலையை 

என் 

இதயக்கோவிலில் 

செதுக்கிவிட்டு 

நாத்திகமாகி விட்டாயே !


காதல் என்ற 

நோயை தந்த நீ 

மறதி என்ற 

மருந்தையும் 

தந்தே போயிருக்கலாம் !



மனம் என்னும் வீதியில் 

நிழற்குடை அமைத்து 

காத்திருக்கிறேன்

நீ இளைப்பாற ...

ஆனால் 

வருவதென்னவோ 

உன் 

நினைவுகள் மட்டுமே !


காதலை 

குற்றமாக 

செய்து போனவள் நீ ...

நான் எப்படி 

ஆயுள் கைதியானேன் !?


ஒவ்வொரு 

திரியாய் ஏற்றுகிறாய் ...

இதயத்தில் 

ஒளி ஏற்றுகிறது 

காதல் !


உனக்கு 

மலர் பாதங்கள் என்று 

யார் சொன்னது  ...

அழிக்கவே முடியவில்லையே 

என் இதய வீதியில்

நீ 

உலா வந்த தடங்களை ! 


அழகு என்ற வார்த்தைக்கு 

அர்த்தம் நீ அல்ல ...

நீ 

அழகை விட 

கொஞ்சம் கூடுதலானவள் !


நீ 

விட்டு சென்ற இடத்திலேயே 

நிற்கிறது 

என் காதல் !

நீ 

எங்கே .. எதை ...

தேடிக்கொண்டிருக்கிறாய் !


நீரூற்றாமலே 

பூத்திருக்கிறதே 

அழகாய் 

ஒரு 

புன்னகை பூ !


நிலவில் 

நீர் இருக்கிறதா 

என்று 

எதற்கு வீண் ஆராய்ச்சி ...

பூத்திருக்கிறதே 

புன்னகை பூ !








No comments:

Post a Comment