உன்னிடம்
எல்லாமே
கவிதையாக தெரிகிறது ..
என்னிடம் எதுவுமே
கவிதையாகாமல்
நழுவுகிறது !
உனக்கு
விருந்தாக வந்த கவிதை
எனக்கு
பசியாகிப் போனது !
உனக்கு
பூக்களம் போட்ட
கவிதை
எனக்கு
போர்க்களம்
அமைக்கிறது !
உனக்கு
தாய்ப்பால் ஊட்டிய கவிதை
எனக்கு
கள்ளிப்பால்
ஊட்ட முனைகிறது !
உன் கவிதை வானில்
என்றும் பௌர்ணமி ..
என்
கவிதை வானில்
என்றும் அமாவாசை !
நினைக்கும் போதெல்லாம்
கவிதையை பிரசவிக்க
உன்னால் முடிகிறது ...
என் கவிதைகள்
கர்பத்திலேயே
கரைகிறது !
நீ
எழுதுகோல் பிடித்தால்
எரிமலை கூட
பூக்களை தூவுகிறது ...
எனக்கோ
பூந்தோட்டம் கூட
தீமழை பொழிகிறது !
காய்ந்த சருகும்
உன் கவிதையில்
காதல் சின்னம் ஆனது ...
தாஜ்மகால் கூட
என் கவிதையில்
தடுமாறுகிறது !
புயல் காற்றையும்
எழுதுகோலில்
நிரப்பி விட்டாய் ...
தென்றல் கூட
என்னிடம்
தெறித்து ஓடுகிறது !
கவிதைக் கடல்
உன்
குவளைக்குள் அடங்கி
விட்டது ...
குவளை நீர் கூட
என்னை
மூழ்கடிக்கிறது !
உன்
ஒரு வார்த்தையே
காதலை
குளிர் காய
வைக்கிறது ...
என் நயமான வார்த்தைகளில் கூட
காதல்
கோபத்தில்
வியர்க்கிறது !
உனது
காதல் மாளிகையில்
வார்த்தைகள்
தென்றலாய் வீசுகிறது ...
எனது
காதல் குடிசையை
வார்த்தைகள்
புயலாய் கடக்கிறது !
உனது
வார்த்தைகளில் கூட
கவிதையை தேடும் உலகம்
எனது கவிதையில்
வார்த்தைகளை
தேடுகிறது !
உனது
கவிதை புறா
தொடு வானில்
சிறகடிக்கிறது ...
எனது
கவிதை கழுகு
தரையில்
தள்ளாடுகிறது !
அவித்த
நெல்மணிகள் கூட
உனது
புஞ்செய் நிலத்தில்
கவிதையாய்
முளைக்கிறது ...
விதை நெல் கூட
எனது நஞ்செயில்
கருகிப்போகிறது !
உன் மடியில்
பச்சை குழந்தையாய்
கொஞ்சி விளையாடும்
கவிதை
எனது முன்னால்
பாசக்கயிறு வீசி
எமனாய் நிற்கிறது!
புரிகிறது
நீ
கவிதையை
வரமாக
வாங்கி வந்தவன் ...
நானோ
அதனை
சாபமாக
வாங்கி வந்தவன் !
No comments:
Post a Comment