சேவக்கோழி கூவும்முன்னே
தெனம் தெனம் எழுந்திருக்கேன்
கண்ணீரால் வாசல் தெளிச்சு
உயிர்க்கோலம் போட்டிருக்கேன்
கொஞ்ச நேரம் ஒன்ன பாக்க
மஞ்ச தேச்சு குளிச்சிருக்கேன்
கொஞ்சம் வெரசா ஓட சொல்லி
கெஞ்சி மணிய பாத்திருக்கேன்
சிறுகனூர் சந்தையிலே
கூற பொடவ வாங்கி வச்சேன்
கொசுவம் மடிப்புக்குள்ள
ஒந்நெனப்ப சொருகி வச்சேன்
சிவன் கோவில் மல்லிகை பூ
சிடுக்கெடுத்து சூடி வச்சேன்
சிறு பொழுது ஒன்ன பாக்க
பொழுது பூரா அலங்கரிச்சேன்
இளம் காத்தும் சிறு வெயிலும்
உச்சி வரைக்கும் ஏறியாச்சு
வெளுத்திருந்த நீல வானம்
கருத்து நிறம் மாறியாச்சு
ஜாதி மல்லி தோட்டத்திலே
சுத்தி வருது பட்டாம்பூச்சி
சேதி சொல்லி யார் வருவா
கத்தி அழுது மனப்பூச்சி
தனிச்சிருக்கும் காட்டுக்குயில்
சத்தம் போட்டு கூவுதிங்கே
குளிரடிக்கும் ஓடை காத்து
சத்தமின்றி வீசுதிங்கே
அடுப்படியில் அரிசியெல்லாம்
நெருப்போடு பொங்குதிங்கே
மனப்படியில் மகிழ்ச்சியெல்லாம்
நீயில்லாம மங்குதிங்கே
ஒத்தையடி பாதையிலே
வரும் பாத பாத்திருக்கேன்
ஒத்தையில ஒந்நேசந்தேடி
இரு விழிதான் பூத்திருக்கேன்
காத்துல ஒன் வாசந்தேடி
சுற்று முற்றும் பாத்திருக்கேன்
சோத்துலதான் நாட்டமில்ல
பசிச்சுதானே காத்திருக்கேன்
வரச்சொல்லி நேரமாச்சு
அந்தி வெயிலும் சாயலாச்சு
தெரு முனையில செட்டியாரும்
கட சாத்தும் நேரமாச்சு
கஞ்சனூர் கடைசி வண்டி
கடந்து போகும் நேரமாச்சு
கஞ்சமான ஒங்காதலால
மனசுக்குள்ள பாரமாச்சு
தங்கமுன்னு நெனைச்சேனே
பித்தளையா போனதுவோ
துளசியின்னு நெனைச்சேனே
கள்ளி செடியா போனதுவோ
காத்திருந்து காத்திருந்து
சித்தம் கலங்கி போயிடுமோ
பாத்திருந்து பாத்திருந்து
நாடிச்சத்தம் அடங்கிடுமோ
நாளெல்லாம் போனாலும்
பொழுதெல்லாம் கடந்தாலும்
நாடெல்லாம் சிரிச்சாலும்
பழுதுன்னு நெனச்சாலும்
காத்திருப்பேன் என்றென்றும்
கொண்டு போகும் நாள் பாத்து
பூத்திருப்பேன் என்றென்றும்
நீ வரும் வழி பாத்து
இரும்பான எம்மனசில்
நிராசைகள் புகுந்திடுமோ
கரும்பான காதலைத்தான்
துரும்பாக அரிச்சிடுமோ
நீ தேடி வரும் முன்னே
காலன் தேடி வருவானோ
உனக்காக துடிக்கும் மூச்சை
கொள்ளை கொண்டு போவானோ