Saturday, June 18, 2022

காலதேவனின் கடைசி பாடம்


நீ 
கன்னத்தில் வைத்த
திருஷ்டி பொட்டு 
சொல்லியது 
நான் 
எவ்வளவு அழகென்று !

செடிகள் 
கொடுத்து வைத்தவை ...
காய்ந்த மலர்களை 
உதிர்த்துவிட்டு 
எவ்வளவு 
ஆனந்தமாக இருக்கின்றன !

வாங்கிய சம்பளம் 
வசதியை தந்தது ...
உன் 
புடவை மடிப்பு 
காசல்லவா 
சந்தோஷத்தை தந்தது ! 

சிந்தாமல் சாப்பிட 
தெரியும் எனக்கு ...
இருந்தும் 
சிந்தியே சாப்பிடுகிறேன் ..
எங்காவது ஒலிக்காதா 
சிந்தாமல் சாப்பிடு 
என்று ஒரு குரல் !

வளர்பிறையாய் 
நான் வளர ...
தேய் பிறையாய் 
தேய்ந்தாய் நீ !

கட்டை வண்டிக்கும் 
காசின்றி 
கால்களால் சுமந்து 
ஊனமாய் போனாய் !

அணைந்து போன 
கலங்கரை விளக்காய் நீ ...
தடுமாறும் 
மாலுமியாய் நான் !

எப்படி 
எப்படியெல்லாமோ 
மாற்றி மாற்றி 
போட்டு பார்த்தேன் ...
உன் அன்பு கணக்கை 
இன்பினிட்டி என்றே 
சொல்கிறது !

இன்னமும் 
திகட்டவில்லையே 
எனக்கு 
நீ 
காட்டிய அன்பு ...
உனக்கு 
திகட்டி விட்டதோ !

நேற்று வரை 
உன் 
அன்பெனும் சொத்தால் 
கோடீஸ்வரனாக இருந்தவன் 
திடீரென்று 
ஏழையாகி விட்டேன் !

செலுலமாக
அதட்டும் 
அம்மாக்களை 
காணும்போது 
ஏங்கித்தான் 
போகிறது மனது !

முதல் மொழியை 
சொல்லித்தந்த 
உனக்கு 
விடை கொடுக்க 
மொழியில்லையே 
என்னிடம் !

வரிகளில் 
வலிகளை 
இறக்கி வைக்க 
முடியாமல் 
மொழியும் 
தவிக்கிறது !

எதை சாப்பிடுவதென்று
தெரியவில்லை ...
உன் எண்ணங்களை 
ஜீரணிக்க !

முகவரியின்றி
கரைந்து 
போனாய் ...
தேடி அலைகிறது 
நினைவுகள் !

உன் உயிரை 
கட்டி இழுத்த 
காலதேவனுக்கு 
உன் நினைவுகளை 
கட்டி இழுக்க 
சக்தி இல்லாமல் 
போயிற்று !

சொர்க்கத்துக்கு 
உன்னை 
அழைத்து சென்றவன் 
என்னை 
நரகத்தில் அல்லவா 
போட்டு விட்டான் !

காலதேவன் நடத்திய 
கடைசி பாடத்தில் 
நீ வென்று விட்டாய் ...
பரீட்சை எழுதாமலே 
நான் 
தோற்று விட்டேன் !

No comments:

Post a Comment