Sunday, June 14, 2026

ஆத்தோரம் ஆலமரம்

ஆத்தோரம் ஆலமரம்
மரத்தடியில் நீ நிக்கையிலே
ஆலிலையில் பிறந்த காத்து
உன்னை மட்டும் தொட்டுச் செல்ல
எனக்குள்ளே வெம்மையடி!

வயலோரம் வரப்புமேல
வசந்தமா நீ நடக்கையிலே
பச்சை நெல்லின் அசைவுக்கெல்லாம்
உன் கொலுசின் ஓசை வந்து
மெட்டுக்கட்டி பாடுதடி !

மாலை நேரம் மேற்குவானம்
மஞ்ச நிறம் பூசிக்கிட்டு
சூரியனும் மறையையிலே
உன் கன்னச்சிவப்பழகு 
அதையும்தான் வெல்லுதடி!

தென்னையடி தோட்டத்திலே 
குடம் தூக்கி நீ வருகையிலே
கெணத்திலுள்ள தண்ணியெல்லாம்
உன் மொகத்த பாத்துபுட்டு 
அலையடிச்சு சிரிக்குதடி!

பூந்தோட்டப் பாதையிலே
புன்னகைத்து நீ நடக்கையில
உன் கூந்தல் வாசம் கண்டு 
தோட்டத்து பூக்களெல்லாம் 
மதி மயங்கி பார்க்குதடி !

சாரல் மழை பெய்யையிலே
சன்னலோரம் நீ நிக்கையிலே
தெறித்து வந்த மழைத்துளிக்கு 
உன் உதட்டில் கெடச்ச சொகம்
எனக்கும்தான் கெடைக்குமோடி!

நதியோரம் மணல்வெளியில்
நாணலாய் நீ நடக்கையிலே
உன் பாதம் பட்ட இடமெல்லாம்
சின்னச் சின்ன பூக்களாக
மனசுக்குள்ள மலருதடி!

தென்றலோடு வந்த நிலா
தேடி உன்னைப் பார்க்கையிலே
நிலவுக்கே வந்த மயக்கம்
என் விழிக்கும் வந்ததாலே
மனசெல்லாம் காதலடி!

No comments:

Post a Comment