Sunday, June 14, 2026

ஆத்தோரம் ஆலமரம்

ஆத்தோரம் ஆலமரம்
மரத்தடியில் நீ நிக்கையிலே
ஆலிலையில் பிறந்த காத்து
உன்னை மட்டும் தொட்டுச் செல்ல
எனக்குள்ளே வெம்மையடி!

வயலோரம் வரப்புமேல
வசந்தமா நீ நடக்கையிலே
பச்சை நெல்லின் அசைவுக்கெல்லாம்
உன் கொலுசின் ஓசை வந்து
மெட்டுக்கட்டி பாடுதடி !

பனிமலையின் அடியோரம் 
கனிவோடு நீ நடந்தால் !
கால் கொலுசின் நாதத்திலே 
கயிலையும் கரைந்திடுமோ !?

மாலை நேரம் மேற்குவானம்
மஞ்ச நிறம் பூசிக்கிட்டு
சூரியனும் மறையையிலே
உன் கன்னச்சிவப்பழகு 
அந்தி வானை வெல்லுதடி!

மாலை நேரம் பனி மலையில்  
மஞ்சள் ஒளி சாய்கையிலே
அந்தி வானின் செவ்வழகும் 
உன்னழகில் பிறந்ததன்றோ!?

தென்னையடி தோட்டத்திலே 
குடம் தூக்கி நீ வருகையிலே
கெணத்திலுள்ள தண்ணியெல்லாம்
உன் மொகத்த பாத்துபுட்டு 
அலையடிச்சு சிரிக்குதடி!

மனம் என்னும் ஏரியில் ..
ஆசை என்ற கற்களை ..
அள்ளி அள்ளி வீசுவார் !
மதியிழந்து வாடுவார் !

மாசு தொடா நீர்போல ...
தெளிவோடு மனமிருந்தால் ..
உனதருள் அலையும் வீசாதோ !!
மனதுள் கயிலாயமும் மலராதோ !! 

பூந்தோட்டப் பாதையிலே
புன்னகைத்து நீ நடக்கையில
உன் கூந்தல் வாசம் கண்டு 
தோட்டத்து பூக்களெல்லாம் 
மதி மயங்கி பார்க்குதடி !

பூக்களாய் பிறப்பதற்கே
புண்ணியம் 
வேண்டுமெனில்...
உன் 
நந்தவனத்தில் மலர
பெருந்தவமும் வேண்டுமோ !?
உன் கூந்தலை 
அலங்கரிக்கும் பேறு
எத்தவத்தால் கிட்டுமோ?

சாரல் மழை பெய்யையிலே
சன்னலோரம் நீ நிக்கையிலே
தெறித்து வந்த மழைத்துளிக்கு 
உன் உதட்டில் கெடச்ச சொகம்
எனக்கும்தான் கெடைக்குமோடி!

அமுதம் எனப்படுவது ..
பாற்கடலில் 
பிறந்ததோ !?
இல்லை ...
உன் 
இதழ் தொட்டு  
சிதறிய 
சிறு 
சாரல் துளியோ !?

நதியோரம் மணல்வெளியில்
நாணலாய் நீ நடக்கையிலே
உன் பாதம் பட்ட இடமெல்லாம்
சின்னச் சின்ன பூக்களாக
மனசுக்குள்ள மலருதடி!

இமயத்தின் 
வெண்பனியில் ...
இளங்காற்றாய் 
நீ நடக்கையிலே ...
உன் காலடி 
பதித்த இடமெல்லாம்
பூப்பது ...
மலர்களா  !?
என் இதயமா !?

தென்றலோடு வந்த நிலா
தேடி உன்னைப் பாக்கையிலே
நிலவுக்கே வந்த மயக்கம்
என் விழிக்கும் வந்ததாலே
மனசெல்லாம் காதலடி!

சடை மேல் 
அமர்ந்த நிலா ..
சக்தி உன்னை 
கண்டதாலே ...
உன்னழகில் 
மதி மயங்கி ..
நாணிக்கொஞ்சம் 
தேய்ந்ததோ  !?

No comments:

Post a Comment