பூக்களை
தேடித்தான்
வருகிறது
என்று
நினைத்திருந்தேன் ...
ஆனால் ...
நீ
வரும்போது
வந்துவிடுகிறது
இந்த
தும்பி ...
===========================
என் பேனா
காகிதத்தில்
இதழ் பதிக்கும்...
நீ...
பூவின் மீது
இதழ் பதித்தால்!
============================
தேனின்
துளிகளை
சேமித்து வைத்து
காத்திருக்கின்றன
சில
பூக்கள்...
வருவாயோ...?
இனிமையின்
துளிகளை
என்னுள்
சேமித்து வைக்க!
============================
நீ
சிறகசைக்க
காத்திருக்கின்றன
எங்களின்
அசுரக்கண்களுக்கு
தப்பிய
சில
குளக்கரைகள்...
============================
நீ
வட்டமடித்து
பறக்கும்
அழகைத் தேடி
வானெங்கும்
அலைகின்றன
என்னைப்போல
சில
பித்து பிடித்த
மேகங்கள்...
============================
உன்னைப் போலவே
நானும்
தேடுகிறேன்
மழை முடிந்ததும்
வயல்வெளியில்
ஓடிக்கொண்டிருந்த
என்
குழந்தைப்
பருவத்தை!
============================
பூச்சிக்
கொல்லி
மருந்துகள்தானே
போட்டோம்!!
நீயும்
பூச்சி என்பதை
மறந்தோமோ!?
============================
சதுப்பு
நிலங்களை
நிரப்பி
உனக்கான
தொட்டிலை
அதில்
புதைத்து
விட்டோமோ!?
============================
பூக்கள்
குறைந்ததால்
உன்
படைப்பையும்
பிரம்மன்
குறைத்து
விட்டானோ!?
============================
எங்கள்
அவசர
வாழ்க்கையின்
ஓட்டத்தில்
இயற்கை
உதிர்ந்து
விட்டதால்
உனக்கான
வான்வழிகள்
வெறுமையாகி
விட்டனவோ!?
============================
என்சைக்கிளோபிடியாவில்
"தும்பி"
என்ற பக்கத்தை
சேர்த்து விட்டோம்..
வருங்காலம்
உன்னை
வரலாறாய்
படிக்க!!
============================
எனது
கவலையெல்லாம்..
எப்படி
வரம் தருவான்
ஈசன் ...?
நீ
தேனுண்ணாத
பூக்களால்
பூஜித்தால் !
============================
No comments:
Post a Comment