வைகறையில்
வெள்ளி நிலா
விடைபெறும்
வேளையிலே...
வெள்ளி நிலா
விடைபெறும்
வேளையிலே...
வாசலெங்கும்
பெருக்கி வைத்து
வாசம் தூவி...
உன்
வரவை வேண்டி
காத்திருப்பது
வாசற்படி கூடத்தான் !
==============================
ஆற்றங்கரை
மணல் மேலே ...
தினம் தினம்
கோலம் வரைந்தேன்
உன்னை வரவேற்க ...
ஒவ்வொன்றிலும்
பதிந்திருந்தது ...
உன்
பாதச்சுவடுகள்தான்!
==============================
செம்பொன் நிறம் பூசி
வியந்து பார்க்கிறது
கிழக்குவானம் ...
உன்
வரவை
தினம்
கனவு காணும் ...
என்
கன்னங்களில்
வெட்கத்தில்
செம்பருத்தி
பூப்பதை!
==============================
வரப்போரம்
நெற்கதிர்கள்
தலையசைத்து
பேசுகின்றன...
"எப்போது
வருவான்?"
என்று...
நெல்லுக்கூட
உன்
வரவுக்காகவே
விளைந்திருக்கிறது!
==============================
கிணற்றிலிருந்து
குடம் நிறைய
தண்ணீர்
எடுத்து வைத்திருக்கிறேன் ...
உன்
தாகம் தீர்க்கவே ...
நீ
அறிவாயோ
என்
தாகம் !
==============================
தயாராகத்தான்
இருக்கிறது
அறுசுவை உணவு ...
நீ வந்து
கொஞ்சம்
பசியாறினால்போதும் ...
ஆறிவிடும்
என்
காதல் பசி !
==============================
அந்தி
வந்து விட்டது ...
அந்தி மந்தாரையும்
பூத்து விட்டது ...
ஓரறிவு
மலர்கள் கூட
காலம் தவறுவதில்லை ..
நீயோ !
மாலை நேரம்...
மேற்கு வானம்
சோர்ந்து
சாய்ந்தபோதும்...
சோர்வறியாமல்
வாசல் நோக்கி
நீள்கின்றன...
உன்னைத்
தேடும்
என் விழிகள்!
==============================
ஆலமரக்
கிளைகளெல்லாம்...
இணை சேர்ந்த
குருவிகளின்
கீதம்...
ஒற்றைக்
குருவியாய்
தவிக்கும்
என் மனதில் மட்டும்...
உன்
பெயரின் கீதம்!
==============================
தெருவோர
செட்டிக்கடை
விளக்குகள்...
ஒன்றன்பின்
ஒன்றாய்
அணைந்தாலும்...
உன்
வரவை நாடும்
என் நெஞ்சின்
நம்பிக்கை
விளக்கு மட்டும்...
அணையவே
மறுக்கிறது!
==============================
காத்திருந்த
காலமெல்லாம்...
காற்றோடுதான்
பேசிப்
பொழுதைக்
கழித்தேன்...
அந்த
காற்றுகூட
கொண்டு சேர்க்கவில்லையோ
எனது காதலை !
==============================
நான்
மறைந்து
போனாலும் ...
என்றாவது
ஒரு நாள்
நீ வரும்போது ...
வாசலெங்கும்
விரிந்து கிடைக்கும்
என்
கூந்தல்
மலர்களிடம்
கேட்டுப்பார் ..
மலர்கள் சொல்லும்
என் காத்திருப்பின்
சாட்சி !
==============================
காலம்
கடந்து...
நீ
வரும்
நாளில்...
வாசல்
மலர்கள்
உன்
பாதங்களை
தீண்டி
சுட்டுவிட்டால்...
கோபம்
கொள்ளாதே.
மலர்களும்
அறியும் ...
என்
காத்திருப்பின்
காயங்களை!
No comments:
Post a Comment