Saturday, June 27, 2026

வாசல் காத்த வசந்தம்

வைகறையில்
வெள்ளி நிலா
விடைபெறும்
வேளையிலே...

வாசலெங்கும்
பெருக்கி வைத்து
வாசம் தூவி...

உன்
வரவை வேண்டி
காத்திருப்பது 

வாசற்படி கூடத்தான் !
==============================
ஆற்றங்கரை
மணல் மேலே ...

தினம் தினம் 
கோலம் வரைந்தேன்
உன்னை வரவேற்க ...

ஒவ்வொன்றிலும்
பதிந்திருந்தது ...

உன்
பாதச்சுவடுகள்தான்!
==============================
செம்பொன் நிறம் பூசி 
வியந்து பார்க்கிறது
கிழக்குவானம் ...

உன்
வரவை
தினம் 
கனவு காணும் ...

என்
கன்னங்களில் 
வெட்கத்தில்
செம்பருத்தி
பூப்பதை!
==============================
வரப்போரம்
நெற்கதிர்கள்
தலையசைத்து
பேசுகின்றன...

"எப்போது
வருவான்?"
என்று...

நெல்லுக்கூட
உன்
வரவுக்காகவே
விளைந்திருக்கிறது!
==============================
கிணற்றிலிருந்து
குடம் நிறைய
தண்ணீர்
எடுத்து வைத்திருக்கிறேன் ...

உன்
தாகம் தீர்க்கவே ...

நீ 
அறிவாயோ 
என் 
தாகம் !
==============================
தயாராகத்தான் 
இருக்கிறது 
அறுசுவை உணவு  ...

நீ வந்து 
கொஞ்சம் 
பசியாறினால்போதும் ...

ஆறிவிடும் 
என் 
காதல் பசி !
==============================
அந்தி
வந்து விட்டது ...

அந்தி மந்தாரையும் 
பூத்து விட்டது ...

ஓரறிவு  
மலர்கள் கூட 
காலம் தவறுவதில்லை ..

நீயோ !
==============================
மாலை நேரம்...

மேற்கு வானம்
சோர்ந்து
சாய்ந்தபோதும்...

சோர்வறியாமல்
வாசல் நோக்கி
நீள்கின்றன...

உன்னைத்
தேடும்
என் விழிகள்!
==============================
ஆலமரக்
கிளைகளெல்லாம்...

இணை சேர்ந்த
குருவிகளின்
கீதம்...

ஒற்றைக்
குருவியாய்
தவிக்கும்
என் மனதில் மட்டும்...

உன்
பெயரின் கீதம்!
==============================
தெருவோர
செட்டிக்கடை
விளக்குகள்...

ஒன்றன்பின்
ஒன்றாய்
அணைந்தாலும்...

உன்
வரவை நாடும் 
என் நெஞ்சின்
நம்பிக்கை 
விளக்கு மட்டும்...

அணையவே
மறுக்கிறது!
==============================
காத்திருந்த
காலமெல்லாம்...

காற்றோடுதான்
பேசிப்
பொழுதைக்
கழித்தேன்...

அந்த 
காற்றுகூட 
கொண்டு சேர்க்கவில்லையோ 
எனது காதலை !
==============================
நான்
மறைந்து
போனாலும் ...

என்றாவது 
ஒரு நாள் 
நீ வரும்போது ...

வாசலெங்கும் 
விரிந்து கிடைக்கும்
என்
கூந்தல்
மலர்களிடம்
கேட்டுப்பார் ..

மலர்கள் சொல்லும் 
என் காத்திருப்பின் 
சாட்சி !
==============================
காலம்
கடந்து...

நீ
வரும்
நாளில்...

வாசல்
மலர்கள்
உன்
பாதங்களை
தீண்டி
சுட்டுவிட்டால்...

கோபம்
கொள்ளாதே.

மலர்களும் 
அறியும் ...

என்
காத்திருப்பின்
காயங்களை!

No comments:

Post a Comment