ஆண் :
வசந்த காலத்திற்கு
வீசிடும் தென்றலும்
வாசனை பூக்களும் ஏனோ?
என் விழி முன்னே
நீயுமிருந்தால்
வேறே வசந்தமும் ஏனோ?
பெண் :
கோவில் பூஜைக்கு
கனலும் கற்பூரமும்
திரியும் தீபமும் ஏனோ?
உனதன்பு தீபம்
என்றும் இருந்தால்
வேறே பூஜையும் ஏனோ?
சரணம் 1
ஆண் :
தென்றலும் உன்னை
தீண்டிய பின்பு
பொறாமை தீயில்
உருகுது !
பூந்தோட்டமும் உன்னை
கண்டதனாலே
பூக்களின் வாசனை
மறக்குது !
ஆண் :
வசந்த காலத்திற்கு
வானில் மதியும்
குயில்களின் கீதமும் ஏனோ?
என் விழி முன்னே
நீயுமிருந்தால்
வேறே வசந்தமும் ஏனோ?
பெண் :
கோவில் பூஜைக்கு
மலர் சரங்களும்
அர்ச்சனை பூக்களும் ஏனோ?
உன் அன்பு மலர்கள்
என்றும் இருந்தால்
வேறே மலர்களும் ஏனோ?
சரணம் 2
ஆண் :
காவிரிக்கரையில்
உன் நடை கண்டு
அன்னமும் கொஞ்சம்
நாணுது !
மயில்களும் உன்னை
கண்டு மயங்க
கூந்தலும் மேகமாய்
தோணுது !
ஆண் :
வசந்த காலத்திற்கு
மலையின் அருவியும்
மயிலின் நடனமும் ஏனோ?
என் விழி முன்னே
நீயுமிருந்தால்
வேறே வசந்தமும் ஏனோ?
பெண் :
கோவில் பூஜைக்கு
பஜனை சங்கீதமும்
மந்திர ஒலிகளும் ஏனோ?
உன் அன்பு மொழிகள்
என்றும் இருந்தால்
வேறே மந்திரம் ஏனோ?
சரணம் 3
ஆண் :
வைகறை சூரியன்
உன்னெழில் கண்டு
பொன்னொளி வீசி
ஆடுதே !
மாலை கதிரவன்
மறைவதனாலே
பிரிய மனமின்றி
வாடுதே !
ஆண் :
வசந்த காலத்திற்கு
அலையும் கடலும்
மாலையில் சுடரும் ஏனோ?
என் விழி முன்னே
நீயுமிருந்தால்
வேறே ஒளியும் ஏனோ?
பெண் :
கோவில் பூஜைக்கு
நெற்றியில் நீறும்
குளிர் சந்தனமும் ஏனோ?
உன் அன்பு மலர்கள்
என்றும் இருந்தால்
வேறே திலகமும் ஏனோ?
ஆண் :
நான்கு வேதங்களும்
பதினெண் புராணமும்
வானில்
சொர்க்கம் தேடுமே !
பெண் :
கைகள் கோர்த்து
உன்னுடன் நடந்தால்
பூமியே
சொர்க்கம் ஆகுமே !
ஆண் :
வசந்த காலத்திற்கு
தேனீயும் தும்பியும்
பட்டாம் பூச்சியும் ஏனோ?
என் விழி முன்னே
நீயுமிருந்தால்
வேறே இனிமையும் ஏனோ?
பெண் :
கோவில் பூஜைக்கு
அறுசுவை கனிகளும்
அபிஷேகங்களும் ஏனோ?
உன் அன்பு மலர்கள்
என்றும் இருந்தால்
வேறே கோவிலும் ஏனோ?
இருவரும் :
மலரும் மணமும் போல்
ஒன்றாய் இருந்தால்
உலகே
வசந்தம் ஆகுமே !
இதயத்தில் காதல்
என்றும் இருந்தால்
இல்லமே ஆலயம் ஆகுமே !
================
செந்நிற இதழ்கள்
தேனின் இனிமை போல்
சிந்தையில் தினமும் ஊறவே !
விழிகளின் மொழிகள்
இதயக்கவிதை என
உயிரின் இசையாய் மாறவே !
மான் விழி மங்கை
என் அருகில் இருந்தால்
வேறே சொர்க்கமும் ஏனோ ?
No comments:
Post a Comment