Wednesday, July 1, 2026

மௌனத்தின் மணியோசை

 1

உன்
கொலுசின்
மணியோசைதான்...

என்
இதயத்தின்
அழைப்பு மணி!

2

நீ
மௌனமாக
நடந்தாலும்...

உன்
கொலுசு மட்டும்
என்னோடு
உரையாடிக் கொண்டே
இருக்கிறது.

3

உன்
பாதங்களை
முத்தமிடும்
ஒவ்வொரு முறையும்...

உரக்க
ஒலிக்கிறதே
உன் கொலுசு!

பொறாமையை
மணியோசையாக்கி
விட்டதோ?

4

பாதை முழுவதும்
வாடிக் கிடந்த
பூக்கள்...

உன்
கொலுசின்
மணியோசை கேட்டதும்
சிறகுகள் முளைத்து
வண்ணத்துப் பூச்சிகளாய்
பறக்கின்றன.

5

"காலில்
போட்டுப் பாருங்கள் சார்...
அழகாக இருக்கும்!"

என்றான்
நகைக்கடைக்காரன்.

உண்மைதான்...

உன்
பாதங்களை
அணிந்த பிறகுதான்
அழகையே
அணிந்து கொண்டது
கொலுசு!

6

மன
அமைதியை
வழங்குவதில்...

கோவில்
மணியோசையைக் கூட
மிஞ்சிவிடுகிறது
உன்
கொலுசின்
மெல்லிசை!

7

"இறைவனின்
பாதங்களைப்
பற்றினால்
சொர்க்கம்"

என்று
சொன்னதை...

உன்
பாதங்களை
பற்றிக்கொண்டு
உண்மையாக்கிக்
கொண்டதோ
கொலுசு!

8

நீ
நடப்பதைத்தானே
செய்கிறாய்?

கொலுசிற்கு மட்டும்
அது
நாட்டியமாகத்
தெரிகிறதோ...

அதற்கேற்றபடி
இசையமைக்கிறதே!

9

எப்போதுதான்
கண்டுபிடிப்பார்கள்?

உன்
கொலுசுக்குள்
ஒளிந்திருக்கும்
இசைக்கருவியை!

10

சிறையிலிருந்தும்
இன்பமாக
வாழ்வது
எப்படியென்று...

உன்
கொலுசின்
மணிகளிடம்தான்
கற்றுக்கொள்ள
வேண்டும்!

11

காதல்...
கோபம்...
குறும்பு...
உற்சாகம்...

நீ
நடக்கும்போதே
எல்லா
உணர்வுகளையும்
பேசிவிடுகிறாய்.

உன்
கொலுசும்
கற்றுவிட்டது
உன்
மௌன மொழிகளை!

12

எழுதத்
தெரிந்திருந்தால்...

என்
கவிதைகளுக்கு
போட்டியாக

ஓராயிரம்
காதல்
கவிதைகளை

எழுதி
குவித்திருக்கும்...

உன்
கொலுசும்!

13


கொலுசணிந்த 
உன் பாதங்களின் 
படத்தினை 
பதிவேற்றி 
பொருத்தமான 
கவிதை 
வேண்டுமென்றேன் ..

கவிதை தயார் என 
அதே 
படத்தினை 
திரும்ப 
பதிவிறக்க சொல்லி 
அதிர வைத்துவிட்டது  !

AI கூட புத்திசாலிதான் !

No comments:

Post a Comment