Wednesday, April 7, 2021

உலகில் இத்தனை கவிதைகளா !!

 உலகிற்கு வெளிச்சம் தர 

நீங்கள் 

சூரியன் ஆக வேண்டியதில்லை ...

சூரியன் இல்லா நேரத்தில் 

விளக்காக இருங்கள் போதும் !!


நிழலின் அருமை 

வெயிலில் தெரியுமாம் ...

சூரியன் இன்றியும் 

உயிர்கள் வாழா !


தடுக்கி விழுந்து விட்டு 

தரை மீது கோபப்பட்டு 

தரையை அடித்து அழும் 

குழந்தை போல 

காதலில் விழுந்து ..

காதல் மீது கோபப்பட்டு 

கலங்கும் குழந்தை நான் !!


உன்னை 

ஒவ்வொரு முறை 

நினைக்கும்போதும் 

விண்ணில் ஒரு 

நட்சத்திரம் தோன்றுமென 

வரமளித்தான் இறைவன் ...

எண்ணி பார்த்துக்கொள் 

உன்னை எத்தனை முறை 

நினைத்தேன் என ....!!!


என் கவிதை தாள் 

காணாமல் போய் விட்டது ...

எனவே ... வாசிக்கிறேன் ...

பொங்கும் கடலலையை 

வீசும் தென்றலை 

மலை சிகரத்தை 

கொட்டும் அருவியை 

பறவை கூட்டத்தை 

சிலிர்க்கும் மழையை

மழலையின் சிரிப்பை 

தவழும் நிலவை  ..

உலகில் இத்தனை கவிதைகளா !!


வேறு யாராகவேனும் 

பிறந்திருக்கலாம் என்று 

நினைத்திருக்கிறாயா என்றாள் அவள் ...

ஒரு முறை 

பேருந்து பயணத்தில் 

பக்கத்து இருக்கை 

குழந்தையை 

நீ கொஞ்சியபோது 

நினைத்திருக்கிறேன் ...

அந்த குழந்தையாய் 

பிறந்திருக்க கூடாதா என்று !!


No comments:

Post a Comment